*பொதுமக்கள் மறியல்
கிருஷ்ணகிரி : கந்திகுப்பம் அருகே ஒற்றை யானை தாக்கியதில் 2 தொழிலாளர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு, 300க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகேயுள்ள கீழ்பூங்குருத்தி பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்து, நேற்று காலை மண்டல பூஜை நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக, கீழ்பூங்குருத்தி கிராமத்தைச் சேர்ந்த கொண்டப்பன்(63), கனகப்பன்(65), கிருஷ்ணன்(80), சதாசிவம்(48) ஆகியோர், நேற்று முன்தினம் இரவு கோயில் அருகிலேயே தங்கியிருந்தனர்.
நேற்று காலை 5 மணியளவில், டீ குடிப்பதற்காக 4 பேரும் கோயிலில் இருந்து 100 அடி தூரம் நடந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள நெல் வயலில் இருந்து ஒற்றை ஆண் யானை வந்துள்ளது. யானையை பார்த்ததும் அங்கிருந்து 4 பேரும் ஓட்டம் பிடித்துள்ளனர். கிருஷ்ணன், சதாசிவம் ஆகியோர் நெல் வயலில் இறங்கியதால், அவர்கள் தப்பித்துக்கொண்டனர்.
ஆனால், கொண்டப்பன், கனகப்பன் ஆகியோரை விரட்டிய யானை, தந்தம் மற்றும் கால்களால் இருவரையும் தாக்கியது. அவர்களின் சத்தம் கேட்டு, கிராம மக்கள் ஓடி வந்து, யானையை விரட்டியடித்தனர்.
யானை தாக்கியதில், இருவருக்கும் கால் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இருவரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கிராமத்தை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள், கிருஷ்ணகிரி- குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னமட்டாரப்பள்ளி பகுதியில், நேற்று காலை 6.30 மணியளவில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன், வருவாய்துறை ஆய்வாளர் யசோதா, வனத்துறையினர், கந்திகுப்பம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, யானை தாக்கி காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் கிராம பகுதிக்கு வராமல் தடுக்க, மின்சார வேலி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், காலை 8.15 மணியளவில மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், சுமார் 1.45 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
