×

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 8 ஆயிரம் பேர் பயன்

*முதல்வருக்கு நன்றி கூறும் மாணவ, மாணவிகள்

ஊட்டி : புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் வாயிலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியை வழங்கவும், உயர்கல்வியில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், அனைத்து குழந்தைகளும் கல்வி பயிலவும் வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அதேபோன்று அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் தலா ரூ. ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி மாநிலம் முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2022-2023ம் நிதியாண்டில் 650 மாணவிகளும், 2023-2024ம் நிதியாண்டில் 835 மாணவிகளும், 2024-2025ம் நிதியாண்டில் 1,304 மாணவிகளும், 2025-2026ம் நிதி ஆண்டில் (31.10.2025) வரை 1,326 மாணவிகளும் என மொத்தம் 4,115 மாணவிகளும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 2024-2025ம் நிதி ஆண்டில் 1,750 மாணவர்களும், 2025-2026ம் நிதி ஆண்டில் 1,841 மாணவர்களும் என மொத்தம் (31.10.2025) வரை 3,591 மாணவர்களும் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாணவி ஒருவர் கூறுகையில், ‘‘நான் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு மருத்துவக்கல்வி பயின்று வருகிறேன். எனக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.ஆயிரம் நிதியுதவி கிடைக்கிறது.

இந்த தொகையானது எங்களது செலவினை நாங்களே பார்த்துக் கொள்ள உதவியாக இருக்கிறது. எங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் பெற்றோரால் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்போது இந்த தொகையானது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

உயர்கல்வியினை தொடரும் வகையில் இதுபோன்றதொரு சிறந்த திட்டத்தினை அறிவித்து ஊக்கத்தொகை வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு மனமார்ந்த நன்றி’’ என்றார்.

இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாணவர் ஒருவர் கூறுகையில், ‘‘நான் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு மருத்துவக்கல்வி பயின்று வருகிறேன். எனக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.ஆயிரம் நிதியுதவி கிடைக்கிறது.

இதன்மூலம் மற்றவர்களை நாடாமல் எங்களது தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.அரசால் வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகையானது என்னுடைய சொந்த செலவிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதுபோன்றதொரு சிறந்த திட்டத்தினை அறிவித்து, ஊக்கத்தொகையை வழங்கி வரும் தமிழ்நாடு முதல்வருக்கு மனமார்ந்த நன்றி’’ என்றார்.

Tags : Nilgiris ,Chief Minister ,Ooty ,M.K. Stalin ,Tamil ,Nadu ,
× RELATED ஓர் ஆண்டு காலமாக ஒன்றிய அரசின்...