கோவை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ, கோவை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. ஆனால் 2 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என அதிமுக தரப்பில் கறாராக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அக்கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த மற்ற நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கடந்த 6 மாதங்களாக கோவை வடக்கு தொகுதியில் முகாமிட்டு நலத்திட்ட உதவி வழங்கல், தேர்தல் பணிகள் என செய்து வந்த வானதி சீனிவாசன், தற்போது மீண்டும் கோவை தெற்கு தொகுதிக்கே சென்று விடும் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. பெரியளவில் அவருக்கு அறிமுகம் இல்லாத அத்தொகுதியில் அதிமுகவினர் ஒத்துழைப்பு இல்லாதது, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் வடவள்ளி சந்திரசேகர் போட்டியிட விரும்புவது உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் தொகுதி மாறுவதற்கு காரணங்களாக இருப்பதாக பாஜவினர் கூறுகின்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளாததால், மீண்டும் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அவர் முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.
வானதியை தொடர்ந்து அண்ணாமலையும் தொகுதி மாற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை, சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவார் என பரவலாக பேச்சு அடிபட்ட நிலையில், திடீரென அந்த முடிவை அவர் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுதியில் பாஜ மற்றும் அதிமுகவிற்கு கணிசமான வாக்கு இருப்பதால், தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் எம்எல்ஏவுமான பி.ஆர்.ஜி. அருண்குமாரும் அத்தொகுதியை விட்டுத்தர மறுக்கிறாராம். இதனால் அண்ணாமலையும் எந்த தொகுதியில் போட்டியிடுவது என குழம்பி தவிப்பதாக கூறப்படுகிறது.
