சென்னை: தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டிவரும் நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தார் தவெக தலைவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த வாரத்தில் தவெக கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியான நிலையில், தவெக சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதை திட்டவட்டமாக மறுத்தார் தவெக தலைவர் விஜய். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கிவருவதால் வேட்பாளர்களை விரைவாக தேர்வு செய்வதில் முனைப்புக் காட்டி வருகிறது தவெக. விரைவில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க தீவிரம்காட்டி வருகிறது.
ஏற்கனவே, கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான முதல்கட்ட நேர்காணல் நடந்தது. அதில், முதல் கட்டமாக 60 வேட்பாளர்களை இறுதி செய்தார் தவெக தலைவர் விஜய்.
தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்டமாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. அந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை விஜய்யிடம் வழங்கினார்.
நேற்று, இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் வகையில், தவெக தலைவர் விஜய், என்.ஆனந்த் வழங்கிய பட்டியலில் உள்ளவர்களை பனையூர் அலுவலகத்தில் நேர்காணல் செய்தார். நேர்காணலுக்குப் பிறகு இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தார். இந்த பட்டியலில் 50 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
