சண்டிகர்: ஹரியானாவில் கடந்த 6 ஆண்டுகளில் 18-45 வயதினர் 17,973 பேர் மாரடைப்பு, இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சட்டப்பேரவையில் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. எனினும், இந்த மரணங்களுக்கு காரணம் தொடர்பாக எந்த ஆய்வுகளும் நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் புள்ளி விவரப்படி 2020-ம் ஆண்டில் 2,394 பேரும், 2021-ம் ஆண்டில் 3,188 பேரும், 2022-ம் ஆண்டில் 2,796 பேரும், 2023-ம் ஆண்டில் 2,886 பேரும், 2024-ம் ஆண்டில் 3,063 பேரும், 2025-ம் ஆண்டில் 3,255 பேரும் ஜனவரி 2026 ல் 391 இறப்புகள் என ஒட்டுமொத்தமாக ஜனவரி 2020 முதல் ஜனவரி 2026 வரை 17,973 இளம் வயதினர் மாரடைப்பு, இதய செயலிழப்பால் உயிரிழந்தனர்.
மாறிவரும் வாழ்க்கை முறைகள், மன அழுத்தம், உணவுப் பழக்கம், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், உடல் உழைப்பின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவையும் காரணமாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலமும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும் இதய சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இளம் வயதினர் தவறாமல் இதயப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும், தங்கள் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கண்காணிக்க வேண்டும், மேலும் உணவுடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
