தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்ைத விதிகள் உடனே அமலுக்கு வந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெங்காய பாரம் ஏற்றி வந்த லாரியை தென்காசி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சிறை பிடித்ததற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் இருந்து வெங்காய பாரம் ஏற்றிக் கொண்டு தென்காசி மாவட்டத்துக்கு சென்ற லாரியை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்துள்ளனர். உரிய ஆவணங்களை காட்டியபோதும் 10க்கும் மேற்பட்ட லாரிகள் விடுவிக்கப்படவில்லை. பறக்கும் படை அதிகாரிகளின் இது போன்ற நடவடிக்கைகளால் லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பறக்கும் படை அலுவலர்களுக்கு லாரி தொழிலாளர்கள் சமர்ப்பிக்கும் போக்குவரத்து ஆவணங்கள் குறித்த புரிதல் இல்லை. நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். குறிப்பாக தேர்தல் பணிகளுக்கு லாரிகளை இயக்க மாட்டோம். இவ்வாறு முருகன் கூறினார்.
