×

பெங்களூருவில் சூறைக்காற்றுடன் கனமழை மோசமான வானிலையால் 30 விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்

சென்னை: பெங்களூருவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க வேண்டிய 30 விமானங்கள் பயணிகள் பாதுகாப்பை கருதி சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில், நேற்று முன்தினம் இரவு திடீரென கடும் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. மோசமான வானிலை நிலவியதால், நேற்று இரவு பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்க வந்த, உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் அனைத்தும், பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் நீண்டநேரம் வானில் வட்டமடித்தன. பின்னர், விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னை, ஐதராபாத், கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு அபுதாபி, பாங்காக், மலேசியா ஆகிய சர்வதேச விமானங்கள் மற்றும் டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, புவனேஸ்வர், அகமதாபாத், பாட்னா, அமிர்தசரஸ், நகர், ஐதராபாத் உள்ளிட்ட சுமார் 30 விமானங்கள், ஒன்றன்பின் ஒன்றாக, சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கின. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டனர். அந்தந்த விமான நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பயணிகளுக்கு குடிநீர் சிற்றுண்டிகளை விமானத்திற்குள் வந்து கொடுத்தனர். தொடர்ந்து, நள்ளிரவுக்கு மேல், பெங்களூருவில் வானிலை சீரடைந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய 30 விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூருக்கு புறப்பட்டு சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Chennai ,Bengaluru ,Chennai airport ,Bengaluru, ,Karnataka ,
× RELATED நீலகிரியில் பூத்துள்ள ஜெகரண்டா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு