சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக குறைந்தது 53 சதவீதம் நீர் இருப்பு தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதால்

திருவண்ணாமலை, மார்ச் 20: சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதால், அணையின் நீர்மட்டம் 100 அடியாக குறைந்திருக்கிறது. அதன்படி, தற்போது அணையில் 53 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் ஆண்டு சராசரியைவிட குறைவாக பெய்தது. ஆனாலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவான 119 அடி முழுமையாக நிரம்பியது.

எனவே, அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, அணையின் வலதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 220 கன அடியும், இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 330 கன அடியும் என மொத்தம் 550 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. அதோடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதி விவசாயிகள் பயன்பெறுவதற்காக, தென்பெண்ணை வழியாக தற்போது வினாடிக்கு 680 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

கடந்த 50 நாட்களாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி மொத்தமுள்ள 119 அடியில் 100.85 அடியாக குறைந்திருக்கிறது. அணையின் நீர்கொள்ளளவு மொத்தமுள்ள 7321 மிகன அடியில், தற்போது 3881 மி.கன அடியாக உள்ளது. இது, அணையின் மொத்த நீர்கொள்ளளவில் 53 சதவீத நீர் இருப்பாகும். சாத்தனூர் அணையில் இருந்து ஏற்கனவே திட்டமிட்டபடி, மே 11ம் தேதி வரை தொடர்ச்சியாக விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதனால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் பின் சம்பா பருவ நெல் சாகுபடி தடையின்றி நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேேபால், குப்பனத்தம் அணை, செண்பகத்தோப்பு அணை, மிருகண்டா அணை ஆகியவற்றின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்திருக்கிறது. ேமலும், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 600 ஏரிகளிலும் தற்போது நீர்மட்டம் குறைய தொடங்கியிருக்கிறது. ஆனாலும், குடிநீர் திட்டங்களுக்கு தேவையான நீர் இருப்பு அணைகளில் உள்ளது ஆறுதலை அளிக்கிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உள்ளது. எனவே, இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: