சேத்துப்பட்டு, மார்ச் 20: போளூர் அருகே செங்கல்பட்டு கோழி வியாபாரியை வெட்டிக்கொன்று விவசாய நிலத்தில் சடலம் மற்றும் அவர் ஓட்டி வந்த இருசக்க வாகனத்தை புைதத்ததாக தாய், தந்தை, மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் திருச்சூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சங்கர்(55) நாட்டுக்கோழி வியாபாரி. இவர் கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து தர்மபுரிக்கு கோழி வாங்க சென்றார். கோழிகளை வாங்கிக்கொண்டு மறுநாள் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொம்மனந்தல் கிராமத்தில் பாஸ்புட் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கே போளூர் அடுத்த அலங்காரமங்கலம் குசால் பேட்டை பகுதியை சேர்ந்த சக்திவேல்(21) என்பவர் சங்கரிடம் நாட்டுக்கோழி குஞ்சு எவ்வளவு விலை என கேட்டு பேரம் பேசி மொத்த கோழியையும் தானே எடுத்துக் கொள்வதாக கூறி, அவரை சோத்துக் கன்னி மலை மேட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் பம்பு செட்டில் மது அருந்திக்கொண்டு அங்கேயே தங்கினர். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் கோழிகளை வாங்கியதற்காக சக்திவேலிடம் சங்கர் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடைேய வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் அருகே இருந்த கொடுவாளால் சங்கரின் காலை வெட்டியுள்ளார்.
இதில் அவரது கால் துண்டாகியது. மேலும் அங்கு இருந்த கட்டை மற்றும் கடப்பாரையால் சங்கரை சரமாரி தாக்கினாராம். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து சக்திவேல் தனது தாய் சத்தி மற்றும் தந்தை ஏழுமலையிடம் தெரிவித்தார். உடனே மூவரும் சேர்ந்து சங்கரின் சடலத்தை விவசாய நிலத்திலேயே யாருக்கும் தெரியாமல் பள்ளம் தோண்டி புதைத்தனர். சங்கரை கொலை செய்தது தடயம் தெரியாமல் இருக்க சங்கரிடம் வாங்கிய கோழிக்குஞ்சுகள் மற்றும் அவரது இருசக்கர வாகனத்தையும் சேர்ந்து நிலத்திலேயே பெரிய பெரிய பள்ளம் தோண்டி புதைத்தனர். மேலும் கோழிக்கூண்டுகளை அருகே உள்ள புதரில் வீசினர். இந்நிலையில் கோழி வாங்குவதற்காக சென்ற சங்கர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தார் செங்கல் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் சங்கரின் செல்போனை டிராக் செய்ததில் போளூர் அருகே சோத்துக் கன்னி பகுதியை காட்டியது தெரியவந்தது. இதனால் டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கர், சஞ்சீவிகுமார், காவலர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் சங்கர் கடைசியாக செல்போனில் பேசிய நண்பர் வரதராஜிடம் கூறிய தகவலை வைத்து காவலர் சரவணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது போளூர் அருகே அலங்காரமங்கலம் கொசால்பேட்டையை சேர்ந்த சக்திவேல் நிலத்தின் அருகே சங்கரிடம் தகராறு செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சக்திவேல் வீட்டிற்கு சென்றபோது தந்தை ஏழுமலை, தாய் சக்தி ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் வேறு காரணத்திற்காக வந்ததுபோல் போலீசார் நாடகமாடி அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால் காவலர் வீட்டிற்கு பின்னாடி சென்று மறைந்திருந்து கணவன், மனைவி பேசுவதை கேட்டார்.
அப்போது கணவன், மனைவி இருவரும் சங்கரை கொலை செய்து விட்டது போலீசுக்கு தெரிந்துவிட்டதோ என அச்சத்தில் பேசிக்கொண்டிருந்தனர். இதற்கிடையில் சக்திவேல் வீட்டிற்கு வந்தார். அப்போது மறைந்திருந்த காவலர் சரவணன் மூவரையும் ஒரே அறையில் பூட்டி, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போளூர் டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் விரைந்து வந்து சக்திவேல், ஏழுமலை, சக்தி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பணம் கேட்ட சங்கரை சக்திவேல் கொடுவாளல் வெட்டி கொலை செய்ததும், அவரின் சடலம் மற்றும் இருசக்க வாகனத்தையும் நிலத்தில் புதைத்ததையும் ஒப்புக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பாலாஜி, கிராம நிர்வாக அதிகாரி பிரவீன் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் டாக்டர் சுகன்யா தலைமையில் நிலத்தில் புதைத்த சங்கரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சங்கரின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
