திருவள்ளூர், மார்ச் 20: மாவட்ட முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்பேரில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நேற்று பூண்டி சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த திருவள்ளூர், பூங்கா நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் உரிய ஆவணமின்றி பைக்கில் கொண்டு வந்த ரூ.1.25 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அவற்றை திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்து, திருவள்ளூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தார். அதற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று செல்லலாம் என திருவள்ளூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
பொன்னேரி: பொன்னேரி அருகே திருவெள்ளைவாயல் பகுதியில் நேற்று தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கார் ஒன்றை மடக்கி பிடித்து சோதனையிட்டபோது, அதில், ரூ.5,21,000 பணம் இருப்பதை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். அதனை, பொன்னேரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிசந்திரனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வள்ளி என்பவர் சீட்டு பணம் கலெக்ஷன் செய்து கொண்டு சென்றதாகவும், உரிய ஆவணங்கள் சமர்பித்து கருவூலத்தில் பணத்தை பெற்று கொள்ளலாம் எனவும் கோட்டாட்சியர் ரவிசந்திரன் தெரிவித்தார். இதேபோல், இலவம்பேடு பகுதியில் மற்றொரு தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி நிதீஷ் என்பவர் இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்த 61,200 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருத்தணி: திருத்தணி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழி தலைமையில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு-ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் நிலை கண்காணிப்பு குழு கண்காணிப்பாளர் சுரேஷ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பாலாஜி குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த காரில் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல் செய்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் அவரது மகன் திருமணத்திற்கு பட்டு புடவைகள் வாங்க காஞ்சிபுரம் செல்வதாக தெரிவித்தார். பணத்திற்கான உரிய ஆவணங்கள் சமர்பித்தால், பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
