திருவள்ளூர், மார்ச் 18: திருவள்ளூரில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பிரதாப் பங்கேற்று, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி, பேசினார். திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் (ம) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரதாப் தலைமையில், வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டு, கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்து, விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் வளாகத்திலுள்ள அறிவியல் பூங்காவில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட் செல்பி பூத் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரதாப் தொடங்கி வைத்து, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியதை தொடர்ந்து, மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாடியநல்லூர் சோதனைச்சாவடி அருகில் புழல் பகுதி, மாதவரம் ரவுண்டனா பகுதியில் பறக்கும் படை மற்றும் நிலை குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணிகளை, கலெக்டர் நேரில் பார்வையிட்டு, ஆய்வுமேற் கொண்டார்.
மேலும், திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரதாப் தலைமையில், அனைத்து நகைகடை மற்றும் நகை அடகு தொழில் புரிவோர், அச்சக, பிளக்ஸ், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள் மற்றும் திருமண மண்டபங்கள் தனியார் கூட்டரங்க உரிமையாளர்கள் ஆகியோர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளிவ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், இணை இயக்குநருமான ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்ரீராம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை (மத்திய) யுவராஜ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் தணிகாச்சலம், மாதவரம் தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் பெருமாள், மாதவரம் வட்டாட்சியர் அருள்ஜோதி, சிறப்புப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
