பத்மஸ்ரீ விருதுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம்!

நன்றி குங்குமம் தோழி

திரைச்சீலை மூடப்பட்ட மேடை. மேடைக்குள் பலத்த விவாதம். ‘‘இந்தப் பெண்ணை வைத்து சங்கீதக் கச்சேரி நடத்த வேண்டும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் எப்படி முடிவு செய்தீர்கள். சபாவின் மேடை கௌரவத்தையே கெடுத்து விட்டீர்கள். கச்சேரிக்கு முக்கிய விஐபிகள் வந்திருக்கிறார்கள்’’ என்று விவாதம் தடித்துக் கொண்டிருந்தது. இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த செயலாளர் பதில் பேச முடியாமல் கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தார். இசை நிகழ்ச்சியை கேட்டு மகிழ இசை ஆர்வலர்கள் இருக்கையில் அமர்ந்த வண்ணம் இருந்தார்கள், நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலையில்.

‘‘இந்தச் சூழலை சமாளிக்க மேடையில் விளக்கு போட வேண்டாம். அவர் பாடட்டும். அவையினர் நிகழ்ச்சியினை ரசிப்பதைப் பொருத்து தொடர்ந்து பாட வேண்டுமா… வேண்டாமா என்பதைத் தீர்மானிப்போம்’’ என்றார் சபாவின் மூத்த உறுப்பினர். இருண்ட மேடையில் அந்தப் பாடகி தன்னைத் தேற்றிக் கொண்டு சாஸ்திரிய சங்கீதப் பாடலை முதல் பாடலாகப் பாடாமல் ஹிட்டான கிளாசிக் சினிமா பாடலைப் பாட ஆரம்பித்தார். அனைவரும் அந்தக் குரலில் மயங்கி உருகிப் போனார்கள். பார்வையாளர்களில் ஒருவர், ‘லதா மங்கேஷ்கரை அழைத்து வந்து பாட வைத்திருக்காங்க. சர்பிரைஸா இருக்கட்டும் என லைட் போடல’ என்றார்.

அவரைத் தொடர்ந்து பார்வையாளர்கள் அனைவரும் லைட் போடச் சொல்லி ஆர்ப்பரிக்க, மேடை விளக்குகள் ஒளிர, நடு நாயகமாக அமர்ந்திருந்தார் அந்தப் பெண்மணி. அவரைப் பார்த்த பார்வையாளர்கள் திடுக்கிட்டு பயந்தும் போனார்கள். காரணம், அவரின் முகம். அதன் பிறகு அவரை, தொடர்ந்து பாடச் சொல்லி பார்வையாளர் வேண்டுகோள் வைக்க, தன் இனிமையான குரலில் அனைவரையும் வளைத்துப் போட்டார் அந்தப் பெண்மணி. நிகழ்ச்சி முடிந்ததும், அவரை விமர்சித்தவர்கள் கை கூப்பி மன்னிப்புக் கேட்டனர்.

அந்தப் பெண்மணியின் பெயர் மங்களா கபூர். காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இசை துறையில் பேராசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அமில வீச்சினால் சிறு வயதிலேயே தன்
அழகான முகத்தை பறி கொடுத்தவர். இன்று அவரின் இனிமையான குரலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘‘1965ம் ஆண்டு. கோடை காலம். வாரணாசியில் கங்கை நதிக்கரைக்கு அருகிலுள்ள எனது வீட்டின் முற்றத்தில் நான் தூங்கிக் கொண்டிருந்தேன். நடு இரவு வேளையில் முகத்தில் கொதிக்கும் வெந்நீர் ஊற்றப்பட்டதாக உணர்ந்தேன். திடுக்கிட்டு அலறினேன். முகத்தை முந்தானையால் துடைத்தேன். கன்னம், நெற்றி, தோல்கள் பிய்ந்து வந்தன. பார்வை மங்கியது. எனது அலறல் கேட்டு அம்மா ஓடி வர, மாமா முகத்தில் டார்ச் லைட் அடித்து பார்த்த போது, அது வெந்நீர் இல்லை ஆசிட் என்று கூறினார்.

எனக்கு அப்போது 11 வயது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் முன்னேற்றம் ஏற்படாத காலம். 36 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டும், என் பழைய முகம் எனக்கு திரும்பக் கிடைக்கவில்லை. நான் உட்பட வீட்டில் அனைவரும் உடைந்து போனோம். வாழ்க்கையை நான் வாழ்ந்தாக வேண்டும் என்று அப்பா தீர்மானித்தார். எனது பூர்வீகம் வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர். கொள்ளுத் தாத்தாவுக்கு அங்கே நிலம், வீடு இருந்தது.

குதிரைகளை விற்கும் தொழிலை நடத்தி வந்தார். பிரிவினைக்குப் பிறகு குடும்பம் வாரணாசிக்கு குடிபெயர்ந்தது. காசிக்கு வந்த பிறகு குடும்பத்தின் செழிப்பு குறைந்தது. நான் பிறக்கும் போது இறந்துவிட்டதாக கூறினார்கள். அதன் பிறகு மருத்துவர் என்னுடைய நாடித்துடிப்பை கண்டறிந்து, எனக்கு உயிர் கொடுத்தார். சின்ன வயதில் என்னை வீட்டில் ‘பொம்மைக் குட்டி’ என்றுதான் அழைப்பார்கள். சிறு வயதிலேயே பாட, நடனமாட, நீந்துவதற்கான அனைத்துப் பயிற்சிக்கும் சென்றேன். அமிலத் தாக்குதலுக்குப் பிறகு வாழ்க்கை சூன்யமாகிவிட்டது.

என் மீது அமிலம் ஊற்றியவர் யார் என்று தெரிந்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் வேறு யாருமில்லை. எங்க வீட்டில் வேலை பார்த்தவர்தான். அவரிடம் பணம் கொடுத்து அமிலத்தை என் மேல் ஊற்றச் செய்தவர் என் மாமாவின் வியாபாரப் போட்டியாளர். அமிலத்தை ஊற்றியவர் தப்பித்துவிட்டதால், திட்டத்தை வகுத்தவர்களுக்கு எதிராக எந்த சாட்சியோ அல்லது ஆதாரமோ இல்லை. நாங்களும் சிகிச்சைக்காக அலைந்து கொண்டிருந்ததால், எதிரியை ‘தொலைந்து போ’ என்று விட்டுவிட்டோம். சிகிச்சைக்குப் பிறகு நான் என் வாழ்க்கையை வாழ வேண்டுமே. அதனால் இசைப் பயிற்சியினை தொடர்ந்தேன்.

ஆனால், மற்ற மாணவர்கள் என் கோர முகத்தை ஏற்றுக்கொள்வார்களா என்று பயந்து இசை ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை. ஒரு வங்காள பாட்டாசிரியர், தான் துணிந்து எனக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தார். அவர், ‘என்னுடன் சேர்ந்து பாட்டு படிக்க விரும்பாதவர்கள் வகுப்பிலிருந்து விலகிக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டார். அவர் இல்லையென்றால் நான் பாடல் பயிற்சி எடுத்திருந்திருக்க மாட்டேன். நாளாக நாளாக எனது மருத்துவச் செலவுகள் அதிகரித்ததால் குடும்பம் சிரமத்திற்கு உள்ளானது. இருந்தாலும் என்னை பாட வைப்பதில் அப்பா உறுதியாக இருந்தார்.

தும்ரி, தாத்ரா, சைதி, ஹோரி, கிளாசிக்கல் இசை வடிவங்களை கற்றுக்கொண்டேன். 1985ல் குவாலியர் கரானா இசைப்பள்ளியில் முனைவர் பட்டம் பெற்றேன். எனது குரலுக்கு அகில இந்திய வானொலியில் பாட வாய்ப்புகள் கிடைத்தன. ‘காசி நகரின் லதா மங்கேஸ்கர்’ என்று பெயர் பெற்றேன். ஆனால், திறமை இருந்தும் வேலை கிடைக்க மிகவும் கஷ்டப்பட்டேன்.

பல நிராகரிப்புகளை சந்தித்தேன். 1989ல் பனாரஸ் பல்கலைக்கழகத்தின் மகிளா மகாவித்யாலயா இசை பீடத்தில் வேலை கிடைத்தது. ஆனால், ஆசிட் வீச்சினால் எனக்கு எலும்பு முறிவுகள், கட்டிகள், எலும்புகள் வளைவதற்கு காரணமான பாகெட்ஸ் என அடுத்தடுத்து நோய்கள் பாதித்தது. ஆனாலும், இசை கற்பிப்பதை நிறுத்தவில்லை.

வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2021ல் எனது சுயசரிதையை வெளியிட்டேன். அது, 2025ல் ‘மங்களா’ என்ற பெயரில் மராத்தி மொழியில் படமாக வெளியானது. இப்போது பத்மஸ்ரீ விருதுக்குப் பிறகு, என்னை நிராகரித்த பலரும், பாராட்டு விழா வைப்பதற்காக அனுமதி கேட்டு வருகிறார்கள். என்னைப்போல் அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், நீதிக்காகப் போராடுங்கள். உங்களின் திறமையை வெளிப்படுத்துங்கள். நீங்கள் விரும்பும் பாதையில் செல்லுங்கள். தேங்கி நின்றுவிடாதீர்கள்” என்றார் மங்களா.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி

Related Stories: