போர் பதற்றத்தால் எல்பிஜி நெருக்கடி; உள்நாட்டு தேவைகளுக்கே முன்னுரிமை: ஒன்றிய அரசு உறுதி

புதுடெல்லி: எல்பிஜி நெருக்கடி நிலவும் சூழலில், உள்நாட்டு தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயற்கை எரிவாயு அமைச்சக இணை செயலாளர் சுஜாதா ஷர்மா, “எல்பிஜி விநியோகம் கவலைக்குரியதாக இருந்தாலும், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் தடையின்றி தொடர்கிறது. இணையம் வாயிலாக எல்பிஜி சிலிண்டர்களை வாடிக்கயைாளர்கள் முன்பதிவு செய்வதில் தற்போது முன்னேற்றம் காணப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் 93 சதவீதம் பேர் இணையம் வாயிலாகவே முன்பதிவு செய்கின்றனர். காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் பல்வேறு மையங்களில் இப்போதும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே இணையம் மூலமாக முன்பதிவு செய்தவர்கள் சற்று பொறுத்து கொள்ள வேண்டும்.

எல்பிஜி சிலிண்டர்கள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தைகளில் விற்கப்படுவதை தடுக்க நாடு முழுவதும் 12,000 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, 15,000 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு போன்ற அண்டை நாடுகள் எரிபொருள் விநியோகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், மத்தியகிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, இந்தியா தனது உள்நாட்டு எரிபொருள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. தேசம் முதலில் என்ற கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்ட பிறகே, உபரியான எரிபொருள் ஏற்றுமதி குறித்து பரிசீலிக்கப்படும்”என்று இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: