×

கோடை வெயில் தொடக்கம் எதிரொலி: பாரம்பரிய பனைஓலை விசிறி விற்பனை ஜரூர்

 

தியாகராஜ நகர்: தென் மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் சாலையோரங்களில் பனை ஓலை விசிறி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. அத்துடன் அதன்தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரையில் பகல் நேர வெப்பநிலை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அதிகபட்ச வெப்ப பதிவு 94 டிகிரி என்ற அளவில் பதிவாகி வந்தது. தற்போது இது 96 டிகிரி வரை உயர்ந்து வருகிறது.

இதனால் பகல் நேரத்தில் பயணம் செய்வோர் வெப்பத்தால் சிரமப்படுகின்றனர். கோடை வெயிலை கருத்தில் கொண்டு ஆகாங்காங்கே குளிர்பான விற்பனை கடைகள் அதிக அளவில் தோன்றி வருகின்றன. சாலை ஓரங்களில் இளநீர், நுங்கு, தர்பூசணி, பழச்சாறு போன்ற குளிர் பான விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது. புழுக்கம் அதிகமாக உணரப்படுவதால் வீடுகளில் மின்விசிறி, ஏசி, ஏர் கூலர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனிடையே ஏழைகளின் ஏசியாக கருதப்படும், பனை ஓலை விசிறி விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தேவநல்லூரை சேர்ந்த மூக்காண்டி என்பவர் பனை ஓலை விசிறிகளை தயார் செய்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பெரிய விசிறி 70 ரூபாய்க்கும், கையடக்க சிறிய விசிறி 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் சிறிய பனை ஓலை விசிறி தயாரித்து உள்ளார். இதுபோல் சில கடைகளிலும் பனை ஓலை விசிறிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன.

பாரம்பரியம் மிக்க முன்னோர்கள் அதிக அளவில் பயன்படுத்திய பனை ஓலை விசிறிகளை பலர் கோடை வெப்பத்தை தணிக்க ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.

Tags : Jarur ,Thiagaraja ,Nagar ,Nella ,Tenkasi ,
× RELATED இந்தி பேசாத எம்.பி.க்களுக்கு நதியல்...