×

காரியாபட்டியில் காலி சிலிண்டர்களுடன் சாலை மறியல் போராட்டம்: இன்று காலை பரபரப்பு

 

காரியாபட்டி: காரியாபட்டியில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் வர்த்தக மற்றும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் பாதிப்பு தமிழகத்திலும் உள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சிலிண்டர் சப்ளை செய்யும் ஏஜென்சி நிறுவனங்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்து வருகின்றனர்.

இருப்பினும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படவில்லை. காரியாபட்டி, பாண்டியன் நகர் முக்குரோடு பகுதியில் தனியார் காஸ் சிலிண்டர் ஏஜென்சி நிறுவன குடோன் உள்ளது. இங்கு, சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும் நுகர்வோர் நேரில் சென்று சிலிண்டர்களை பெறுவது வழக்கமாம். இங்கு, முன்பதிவு செய்து சிலிண்டர் விநியோகம் செய்யப்பட வேண்டிய நபர்களுக்கு முறைப்படி விநியோகம் செய்யப்படவில்லையாம். இதையடுத்து இன்று காலை பொதுமக்கள் நேரில் சென்று பார்த்தபோது, காஸ் சிலிண்டர் குடோன் மூடப்பட்டு இருந்ததால் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து, காரியாபட்டி – அருப்புக்கோட்டை சாலையில் காலி சிலிண்டர்களுடன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காரியாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட தனியார் சிலிண்டர் ஏஜென்சி நிர்வாகத்திடம் பேசி சிலிண்டர்கள் கிடைக்க உரிய ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Kariyabati ,KARIYAPATI ,KARIYABADI ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு:...