நாகர்கோவில்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈரான் நாட்டிற்குச் சென்று ‘கிஷ்’ மற்றும் ‘சீரோ’ ஆகிய பகுதிகளில் தங்கியிருந்து விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்து வந்தனர். இந்நிலையில், அங்கு தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக, இவர்கள் அங்கிருந்து குமரி மாவட்டத்தில் உள்ள உறவினர்களுக்கு ஆடியோ தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதில் தொழில் பாதிக்கப்பட்டதால் வருமானமின்றி தவிக்கும் மீனவர்கள், போதிய உணவின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ‘படகுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நாங்கள், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். போதிய மருத்துவ வசதிகளும் இல்லை’ என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டையடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காலில் பலத்த காயமடைந்து, போர்ச் சூழலால் மருத்துவமனைக்குக் கூட செல்ல முடியாமல் படகிலேயே தவித்து வருவதாக அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘இந்தியத் தூதரகத்தை அணுகியபோது, ஆரம்பத்தில் உதவுவதாகக் கூறிய அதிகாரிகள், தற்போது எங்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது எனக் கூறி கைவிரித்துவிட்னர். ‘எங்களை எப்படியாவது காப்பாற்றி ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என ஒன்றிய அரசுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
* அர்மீனியா வழியாக வந்தால் ரூ.50ஆயிரம் செலவாகும்
மீனவர்களை மாற்று வழியாக, அர்மீனியா நாட்டிற்கு சாலை மார்க்கமாக அழைத்துச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இதற்கு விசா மற்றும் விமான டிக்கெட் என ஒரு நபருக்கு 50,000 ரூபாய் வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது. ஏழை மீனவர்களான தங்களிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை என்பதால், அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் திகைத்து நிற்கின்றனர்.
