நிறைய ஆஃபர் கொடுத்தாலும் டெல்லிக்கு அடிபணிந்து செல்பவர் விஜய் அல்ல; 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப்போட்டி: ஆதவ் அர்ஜுனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

சென்னைநிறைய ஆஃபர் கொடுத்தாலும் டெல்லிக்கு அடிபணிந்து செல்பவர் விஜய் அல்ல. வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். சென்னை, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் வீனஸ் பகுதியில் த.வெ.க., கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சி சார்பில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ஜே.சி.டி.பிரபாகரன், வி.எஸ்.பாபு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். அதைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: தமிழகம் மட்டுமின்றி ஐந்து மாநிலத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று சி.பி.ஐ விசாரணை முடிந்து விஜய் வெளியே வந்ததும், தேர்தல் பிரசாரத்தை டெல்லியிலேயே விஜய் ஆரம்பித்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், இனி நாம் எங்கு வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம்.

எங்களுக்கு எந்த பயமும் இல்லை, எங்களைப்பற்றி எந்த அவதூறு வேண்டுமானாலும் பரப்புங்கள் கவலையில்லை. விஜய் தேர்வு செய்யும் வேட்பாளர்கள் எல்லாம் பணத்தை வைத்து தேர்வு செய்வதில்லை. தவெகவின் முதல் மாநாட்டில் எடுத்த முடிவின்படியே தேர்தலை சந்திக்கிறோம். 234 தொகுதியிலும் நாம் தனியாக போட்டியிடுகிறோம். விஜய்க்கு நிறைய ஆஃபர் கொடுத்தாங்க…50-50. நீங்க 90… நாங்க 90… நீங்க 2.5 வருஷம் முதல்வர்.

நாங்க 2.5 வருஷம் முதல்வர். ஆனால் விஜய் அதை புறம்தள்ளி விட்டு, தமிழக மக்களுக்காக தனியே வந்துள்ளார். முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு டெல்லிக்கு அடிபணிந்து செல்பவர் அல்ல விஜய். பாஜவுடன் கூட்டணி பேசி வருவதாக கடந்த ஒரு மாதமாக பரவும் தகவல் உண்மை அல்ல. ஜனநாயகன் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் தான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

* ரஜினி அரசியலிலும் இல்லை போட்டியிலும் இல்லை அவர் வருத்தப்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்

ஆதவ் அர்ஜூனா பேசுகையில், ‘‘ரஜினி நம் அன்புக்குரியவர், அவரது மன்றத்தில் இருந்து வந்தவரை நாம் மேடை அளித்து, பொறுப்பும் வழங்கியவர் நம் தலைவர் அதை மடைமாற்றும் வேலையை தான் சமீபத்தில் செய்தனர். ரஜினி உங்கள் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அன்பு மட்டுமே உள்ளது. கீழ்த்தரமான பிரசாரத்தை செய்து ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் செய்தனர். அதைத் தான் நான் சொன்னேன். ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னதும் அவருக்கு 18 சதவீதம் ஆதரவு உருவானது.

அதிமுகவும் ரஜினிக்கு எதிராக பிரசாரம் செய்தது. ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் இருக்க பல்வேறு பிரசாரத்தை செய்தனர். ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது கடுமையாக எதிர்த்தவர் பழனிசாமி, தற்போது ரஜினி ஒரு பதிவிட்டார், எங்களுடைய தலைவருக்கும் நீங்கள்தான் தலைவர். எங்கள் தலைவரின் நிலைப்பாடு தான் எங்கள் நிலைப்பாடு, நான் பேசியதால் நீங்கள் வருத்தப்பட்டிருந்தால் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். ரஜினி அரசியலில் இல்லை, நாம் அவருடன் போட்டி போட வேண்டிய அவசியம் இல்லை, நம் பிரசாரம் திசை திரும்பக்கூடாது’’ என்றார்.

Related Stories: