வேலூர் மாவட்டத்தில் 40 பறக்கும் படை, கண்காணிப்பு குழு வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தம்: தேர்தல் அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 40 பறக்கும் படை, கண்காணிப்பு குழு வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம்தேதி நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு பதுக்கப்படும் பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பறக்கும் படை அதிகாரிகள் சுற்றி வரும் பகுதிகளையும், அவர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய ஏதுவாக வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டது. இதில் 30 பறக்கும் படை வாகனங்களுக்கும், 10 நிலை கண்காணிப்பு வாகனங்கள் என மொத்தம் 40 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் வாக்காளர்கள் எந்த பகுதியில் இருந்து புகார் கூறினாலும், அருகில் எந்த பகுதியில் பறக்கும் படை வாகனம் இருக்கிறது என்பதை கண்டறிந்து உடனே சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்க முடியும். இதுபோல் பறக்கும் படை அதிகாரிகளும் சரியாக வேலை செய்கிறார்களா? என்பதையும் கண்காணிக்க முடியும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: