×

கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கும் அமெரிக்க வாழ் இந்திய இல்லத்தரசி!

நன்றி குங்குமம் தோழி

மூன்று கின்னஸ் உலக சாதனை சான்றிதழ்கள், ஐந்து நூல்கள் வெளியீடு, ஓவியக் கலையில் உயர்ந்த படைப்புகள், ஆட்டிசம் குழந்தைகளின் அன்னை, இசைப் பள்ளி மூலம் இசை மேதைகளை உருவாக்கும் சங்கீத நற்பணி, ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு, கவிதைகள், ஆங்கில மொழிப் பெயர்ப்பு என இவரின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இல்லத்தரசியாக இருந்தாலும், தனக்கென்று சாதனைகளை சத்தமில்லாமல் நிகழ்த்தி வருகிறார் அமெரிக்க வாழ் இந்தியரான மேனகா நரேஷ்.

‘‘என்னுடைய இந்த ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு என் குடும்பம்தான் முக்கிய காரணம். எங்க வீட்டில் அனைவருமே எந்தவித சத்தமில்லாமல் சாதனை படைத்தவர்கள் என்றுதான் சொல்லணும். பொறியாளரான என் அப்பா இஸ்ரோவில் வேலை பார்த்தார். 2017ல் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை ஏவி இஸ்ரோ சாதனை படைத்தது. அந்த ராக்கெட்களுக்கான எரிபொருள் கலன் வடிவமைப்புக் குழுவின் தலைவராக என் அப்பா இருந்தார். தம்பி பரதநாட்டியத்தில் முத்திரை பதித்தவர். நாட்டியத்தில் பி.ஹெச்.டி. பட்டம் பெற்றவர்.

சமீபத்தில் ‘ஆட்டம்’ என்ற நாட்டியம் பயில்விக்கும் கருவியை உருவாக்கியதற்காக காப்புரிமையை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர். அம்மாவும் பாட்டியும் வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். நான் இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்திருந்தாலும், என் கணவரின் ஊக்கமும் என்னை இவ்வளவு வேலைகளில் இன்றும் உற்சாகமாக ஈடுபட வைக்க காரணம்’’ என்றவர், அவர் செய்த கின்னஸ் சாதனைப் பற்றி விவரித்தார்.

சுபஸ்ரீ நடராஜன் ‘மதர் இந்தியா க்ரோசே குயின்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வந்தார். அதில் நானும் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறேன். க்ரோசே பின்னலில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்த அவர் முடிவு செய்திருந்தார். அதில் பங்கு பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 2019, 2024, 2025 மூன்று ஆண்டுகள் க்ரோசே திட்டங்களுக்காக நான் செய்த பங்களிப்பிற்கு எனக்கு ‘கின்னஸ் உலக சாதனை’க்கான சான்றிதழ்கள் கிடைத்தது.

க்ரோசே கொண்டு 2019ல் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் செய்வதிலும், 2024ல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சால்வை செய்ததாலும், 2025ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு போர்வைகள் செய்யத் தயாரிக்கப்பட்ட கிரான்னி சதுரங்கள் செய்ததற்காகத்தான் எனக்கு கின்னஸ் உலக சாதனை சான்றிதழ்கள் கொடுத்தார்கள்.

நான் அடிப்படையில் இயன்முறை மருத்துவர் என்றாலும், பாடுவது, எழுதுவது, கவிதை எழுதுவது, கைவினைக் கலைஞராக, ஆசிரியராக என அனைத்து பணியிலும் என்னை நான் ஈடுபடுத்திக் கொள்ள பிடிக்கும். அதனால் அனைத்து துறைகளிலும் செயலாற்றி வருகிறேன். நான் இயன்முறையில் இளங்கலைப் பட்டமும், உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன். இதனுடன் மான்டிசரி கல்வியிலும் அட்வான்ஸ்டு டிப்ளமோ முடித்துள்ளேன். தற்போது கர்நாடக இசையில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறேன். இசையில் எனக்கு ஆர்வம் இருப்பதால்தான் நான் அதை கற்றுக் கொள்ளவே விரும்பினேன்.

என்னைப் போல் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்காகவே சாய் குருகுலம் என்ற பெயரில் இசைப் பள்ளி ஒன்றை நிர்வகித்து வருகிறேன். எழுத்து மேல் ஆர்வம் இருந்ததால் கட்டுரைத் தொகுப்பு, ஹைக்கூ கவிதைகள் என ஐந்து நூல்களை வெளியிட்டு இருக்கிறேன். மேலும், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன்’’ என்றவர், சங்கீத பாஸ்கரா, கவிச்செம்மல், அருந்தமிழ் தாரகை, தன்முனைச் சிற்பி போன்ற விருதினை பெற்றுள்ளார்.

‘‘தமிழையும் இந்திய பாரம்பரியக் கலைகளையும் அமெரிக்காவில் உள்ள இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த ஆண்டு சென்னைக்கு வந்த போது, சிறுதாமூர் கிராமத்துப் பள்ளியிலும், வேலப்பன்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறையை நிகழ்த்தினேன்.

இதன் மூலம் குழந்தைகளின் மனதில் அவர்களாலும் ஆங்கில மொழியினை எளிதாக பயில முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடிந்தது. இதனை நான் இந்தியாவிற்கு வரும் போது தொடர வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறேன். மேலும், க்ரோசே கலை மூலம் சமுதாயத்திற்கு என்னாலான உதவிகளை செய்ய வேண்டும். என்னுடைய இசை நிறுவனம் மூலம் வளரும் இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும். எழுத்து துறையில் மேலும் சாதிக்க வேண்டும். ஓவியக் கண்காட்சி நடத்த வேண்டும் என பல திட்டங்கள் உள்ளது. அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும்’’ என்றார் மேனகா.

தொகுப்பு: விஜயா கண்ணன்

Tags :
× RELATED சமூக அக்கறையுடன் செயல்படும் பெண் தொழில்முனைவோர்!