×

பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே என் கனவு!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், அனைத்து வேலைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அதே சமயம் இன்றும் சில பெண்கள் தங்களின் சிறிய கூட்டுக்குள் இருந்து வெளியே வராமல் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் சுயமாக சம்பாதிக்கவும் பயிற்சி அளித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ திகா. இவரின் ஸ்ரீ பாலாஜி தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இயங்கி வருவதுடன் அதில் 300க்கும் மேற்பட்ட பயிற்சிகள் பெண்களுக்கு அளிக்கப்படுகிறது.

‘‘நான் அடிப்படையில் ஜர்னலிசம் மாணவி. சில காலம் ஊடகத்துறையில் வேலை பார்த்து வந்தேன். தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும், கிராபிக் டிசைனராகவும் வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பிறகு வீடு வாங்கி வேறு இடத்திற்கு சென்றோம். அங்கு பெண்கள் பலரும் எந்தவித வேலை வாய்ப்பும் இல்லாமல் இருப்பதை பார்த்தேன். காரணம், அதற்கான பயிற்சி மையங்கள் அங்கு எதுவும் இல்லை. அந்தப் பெண்களிடம் பேசிய போது வாய்ப்பு கிடைத்தால் தங்களுக்கான வேலையினை அமைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்கள். அதனால் அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினேன். அப்போது அவர்களும் சுயமாக சம்பாதிக்க வழிவகுத்து தந்தால் என்னவென்று தோன்றியது. அந்த எண்ணத்தின் விதைதான் இந்தப் பயிற்சி மையம்.

தனக்கான சம்பாத்தியம் வேண்டும் என்று பெண்கள் எண்ணுகிறார்கள். அதில் ஒரு சிலர் படித்துவிட்டு வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால், கல்யாணமானதும் பலர் வீடு, குடும்பம் என்று தங்களின் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். அவர்களுக்கு தொழில் திறன் சார்ந்த பயிற்சி அளித்தால் வீட்டில் இருந்தபடியே அவர்களும் சம்பாதிக்கலாம் என்ற சிந்தனையில்தான் 2014ம் ஆண்டு என்னுடைய பயிற்சி மையத்தை ஆரம்பிச்சேன். தற்போது எங்களின் பயிற்சி மையத்தில் தையல், எம்பிராய்டரி, ரெசின் ஆர்ட், கேண்டில் மேக்கிங், சாக்லேட் மேக்கிங், பேக்கிங், ஆரி வேலைப்பாடு.

ஹெர்பல் நாப்கின் தயாரிப்பது, விவசாயம், ஆட்டோமொபைல், ஓட்டல் மேனேஜ்மென்ட், இன்டீரியர் டிசைன், ஹெல்த் மேனேஜ்மென்ட், மான்டசரி கல்வி என பலதரப்பட்ட பயிற்சி அளித்து வருகிறோம். மேலும், பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பினையும் ஏற்பாடு செய்து தருகிறோம். சுய தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு அரசின் சலுகைகள், வங்கியிடம் எவ்வாறு கடன் உதவி பெறலாம், பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்கான வழி போன்ற உதவிகளும் செய்து தருகிறோம்.

இதுவரை சுமார் 5000த்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளித்து இருக்கிறோம். இதில் சிலர் சொந்தமாக தொழில் துவங்கி நடத்தி வருகிறார்கள். ஒரு சிலர் எங்களின் கிளை பயிற்சி மையத்தினை எடுத்து நடத்தி வருகிறார்கள். சென்னை மட்டுமில்லாமல் கோவை, ஈரோடு, சேலம் என 15 இடங்களில் எங்களின் கிளை பயிற்சி மையம் இயங்கி வருகிறது” என்றவர் நேரடியாக மட்டுமில்லாமல் ஆன்லைன் முறையிலும் பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘கோவிட், ஆன்லைன் கல்வி முறைக்கு வழிவகுத்தது. முதலில் ஆன்லைனில் பயிற்சி அளிக்க முடியுமா என்று யோசித்தோம். ஆனால், பெண்களுக்கு அது பெரிய வரப்பிரசாதமாக மாறியது. காரணம், சில பெண்கள் வீட்டுச்சூழல் காரணமாக நேரடியாக பயிற்சிக்கு வரமுடியாமல் போனது. ஆரி வேலைப்பாடு கூட ஆன்லைன் முறையில் எங்களிடம் பெண்கள் பயின்று வருகிறார்கள். பட்டப்படிப்பு அவசியம் அதே சமயம் தனித் திறமையினை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்பதான் அவர்களுக்கு அவர்கள் மேல் ஒரு தன்னம்பிக்கை ஏற்படும். என் அம்மா கிராஃப்ட் டீச்சரா வேலை பார்த்தாங்க. அவங்களுக்கு தையல் கலை தெரியும். அவங்களை கொண்டுதான் எங்களின் முதல் பயிற்சி துவங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு பயிற்சியாக அறிமுகம் செய்தோம். நான் ஊடகத்துறையில் இருந்ததால், என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் என்னுடைய பயிற்சி மையத்தில் பெண்கள் இணைந்தார்கள்.

குறைந்த கட்டணத்தில் தரமான பயிற்சி கிடைக்கும் போது எங்களிடம் பயிற்சி பெற வந்தவர்களே அவர்களின் தோழிகளை அழைத்து வந்தார்கள். மாணவர்கள் மட்டுமில்லாமல் ஒரு சில பயிற்சியாளர்களும், தங்களுக்கு இந்தக் கலை தெரியும் என்றும், அதை சொல்லிக் கொடுக்க வாய்ப்பு கேட்டார்கள். அப்படித்தான் படிப்படியா 300க்கும் மேற்பட்ட பயிற்சிகளை எங்களால் அளிக்க முடிகிறது. இதில் மார்க்கெட்டில் லேட்டெஸ்ட் டிரெண்டில் இருக்கும் கலைகளையும் நாங்க எங்களின் பயிற்சியில் சேர்த்துக் கொள்வதால், எங்களால் அந்தந்த காலத்திற்கு ஏற்ப சொல்லிக் கொடுக்க முடிகிறது” என்றவர், 30 நாள் 30 சேலஞ்ச் குறித்து விவரித்தார்.

‘‘நாங்க பயிற்சி மட்டுமில்லாமல் வர்க்ஷாப்பும் நடத்துகிறோம். இதைத் தவிர எங்களின் 30 நாள் சேலஞ்ச் திட்டத்தில் தினமும் இரண்டு மணி நேரம் செலவு செய்தால் போதும். ஒவ்வொரு நாளும் ஒரு கலையை கற்றுக்கொள்ள முடியும். அதில் பயிற்சி மட்டுமில்லாமல், அதற்கான பொருட்கள் எங்கு வாங்கலாம்… எவ்வாறு தொழில் துவங்கலாம் என்றும் விவரிக்கிறோம். இது முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் சொல்லித் தருவதால், இந்தியா மட்டுமில்லாமல் துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். மேலும், எங்களின் ‘ஹோம் டூ ஹோம்’ ஆப் மூலமாகவும் பயிற்சியினை எளிதாக பெறும் வகையில் அமைத்திருக்கிறோம். செல்போனில் ஆப்பினை டவுன்லோட் செய்து, விரும்பும் பயிற்சியினை கற்றுக்கொள்ளலாம்.

பயிற்சி எடுத்தால் மட்டும் போதாது. அடுத்தகட்டமாக வருமானமும் மேற்கொள்ள வேண்டும். இதற்காக நிறுவனம் அமைக்கும் அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே செய்யலாம். அப்படி செய்யும் போது உங்களின் பிராண்டின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அடுத்து கரண்ட் அக்கவுன்ட் ஒன்றை வங்கியில் திறக்க வேண்டும். பிறகு ஜி.எஸ்.டி பெற வேண்டும். நீங்க சோப்பு மற்றும் சருமம் சார்ந்து இயற்கை பொருள் தயாரித்தால், உங்க பொருளின் தரத்தினை ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும். உணவு சார்ந்த தொழில் என்றால், FSSAIயின் அங்கீகாரம் வேண்டும். இதெல்லாம் முறையாக செய்திருந்தால்தான் வங்கி உங்க தொழில் வளர்ச்சிக்கு கடன் தருவாங்க.

சிலருக்கு தொழில் செய்ய விருப்பம் இருக்கும். ஆனால், என்ன செய்வதுன்னு தெரியாது. அவர்களின் விருப்பத்தை தெரிந்து கொண்டு அதற்கான பயிற்சி அளிப்போம். தொழில் துவங்குவதற்கான ஆலோசனையும் தருவோம். தற்போது தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையமாக செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இதனை ஒரு பள்ளி அல்லது கல்லூரியாக அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது” என்றார் ஸ்ரீ திகா.

தொகுப்பு: ஷன்மதி

Tags :
× RELATED ‘த்ரிஷ்டி’யை கண்டுபிடித்தவருக்கு பத்மஸ்ரீ !