மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலை அறிவித்த உடனேயே சமையல் காஸ் பிரச்னையை கையில் எடுத்து முதல்வர் மம்தா பேரணி நடத்தியது மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய கொல்கத்தாவின் டோரினா கிராசிங்கில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘பா.ஜ முகாம் மேற்குவங்கத்தில் எத்தனை அதிகாரிகளை வேண்டுமானாலும் மாற்றலாம், ஆனால் அவர்களால் அரசாங்கத்தை மாற்ற முடியாது.
மாற்று அதிகாரிகளாக யாரை நியமித்தாலும் பரவாயில்லை; அவர்கள் அனைவரும் மேற்குவங்கத்திற்காக வேலை செய்வார்கள். மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் தலைமைச் செயலாளரும் ஒரு மேற்குவங்க பெண்ணுமான நந்தினி சக்ரவர்த்தியை நீக்க அவர்கள் நள்ளிரவைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் எவ்வளவு பெண்களுக்கு எதிரானவர்கள் என்பதை இந்த மாற்றம் காட்டுகிறது. எங்கள் உள்துறை செயலாளர் ஒரு வங்காள மொழி பேசாத நபர்.
வங்காளத்தின் திறமையான அதிகாரிகள் மீது அவர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த வெறுப்பை அவரது நீக்கம் பிரதிபலிக்கிறது. சமையல் காஸ் பிரச்னை செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவன சேவையகங்களை முடக்குவதன் மூலம் எல்பிஜி நெருக்கடி செயற்கையாக உருவாக்கப்படுகிறது. நான் அவர்களின் பிரதிநிதிகளுடன் பேசியுள்ளேன். சமையல் காஸ் சப்ளைக்கு உண்மையான நெருக்கடி இல்லை. ஆனால் அப்படி உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார்.
