×

துபாய் வான் எல்லை மூடப்பட்டதால் சென்னையில் இன்று 3 விமான சேவைகள் முடக்கம்: 700 பயணிகள் பரிதவிப்பு

 

மீனம்பாக்கம்: துபாய் நகர விமானநிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 2.15 மணியளவில் 242 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் வந்திறங்கியது. பின்னர், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 206 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டு, குஜராத் கடல் எல்லையில் சுமார் 38 ஆயிரம் அடி உயரத்தில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில், துபாய் விமான நிலையம் அருகே இன்று காலை திடீரென மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடப்பதாகவும், இதனால் அதன் வான்வழி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதாகவும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானிக்கு அவசர தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், அந்த விமானத்தை சென்னைக்கு திருப்பி கொண்டு சென்று தரையிறக்கும்படியும், மறுஉத்தரவு வரும்வரை சென்னையில் இருந்து புறப்பட்டு வரவேண்டாம் என்று விமானிக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானி தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவித்தார். இதையடுத்து, அந்த விமானம் இன்று காலை 8.20 மணியளவில் சென்னைக்கு மீண்டும் திரும்பி வந்து, விமானநிலைய ஓடுபாதையில் தரையிறங்கியது. பின்னர், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளுக்கும் விமானநிலைய விருந்தினர் அறையில் காலை உணவு வழங்கப்பட்டு, சென்னை நகர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, துபாயிலிருந்து இன்று காலை 8.15 மணியளவில் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்த எமிரேட்ஸ் விமானம் 2வது முறையாக காலை 9.50 மணியளவில் துபாய்க்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. எனினும், துபாய் வான் எல்லை மூடப்பட்டு இருந்ததால், அந்த விமானம் துபாய் செல்ல முடியாமல், பலமணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல், சென்னையில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் துபாய் செல்ல வேண்டிய ஏர்இந்தியா எக்ஸ்பிரசின் சிறப்பு விமானம் 186 பயணிகளுடன் புறப்படத் தயார்நிலையில் இருந்தது.

எனினும், துபாய் வான் எல்லை மூடப்பட்டு இருப்பதால், அந்த சிறப்பு விமானமும் பலமணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் துபாய் செல்ல வேண்டிய 3வது விமானமும் தற்காலிகமாக பலமணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று துபாய் செல்ல வேண்டிய 3 விமானங்களும் முடக்கப்பட்டு, அடுத்தடுத்து பலமணி நேர தாமத புறப்பாடு என அறிவிக்கப்பட்டதால், அங்கு செல்ல வேண்டிய 700க்கு மேற்பட்ட பயணிகள் பெரிதும் பரிதவித்து வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே பரபரப்பு நிலவியது.

Tags : Chennai ,Dubai Air border ,Emirates Airlines ,Dubai City Airport ,Chennai Airport ,Dubai ,
× RELATED மதுராந்தகம் தொகுதியில் காரில் கொண்டு சென்ற ரூ.15 லட்சம் பிடிபட்டது