ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து சட்டென்று மாறிய வானிலை ஜப்பான் மகளிர் கோல் மழை

சிட்னி: பிலிப்பைன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து காலிறுதிப் போட்டியில் நேற்று, ஜப்பான் அணி 7 கோல்கள் அடித்து அபார வெற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து காலிறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று நடந்தது. அதில் ஜப்பான் – பிலிப்பைன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் ஜப்பான் வீராங்கனைகள் அமர்க்கள ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரும்பாலான நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இருப்பினும் முதல் பாதி வரை கோல் எதுவும் விழவில்லை. முதல் பாதி ஆட்டம் முடிந்தபின்னர் கிடைத்த ஸ்டாப்பேஜ் நேரத்தில் 45+2வது நிமிடத்தில், ஜப்பான் வீராங்கனை மினா தனகா முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார். அடுத்த நிமிடத்தில் ஜப்பானின் டோகோ கோகா 2வது கோல் போட்டு அசத்தினார். அவரைத் தொடர்ந்து ஜப்பானின் ரெமினா சிபா 65வது நிமிடத்திலும், மனகா மட்சுகுபா 67வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் போட்டு அசத்தினர்.

பின்னர், 76வது நிமிடத்தில் ஜப்பானின் டோகோ கோகா மீண்டும் ஒரு கோல் போட்டார். அதைத் தொடர்ந்து மொமொகா தனிகவா 86வது நிமிடத்திலும், ரிகோ யுகி 90வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர். மாறாக, கடைசி வரை பிலிப்பைன்ஸ் அணி வீராங்கனைகள் ஒரு கோல் கூட முடியாமல் திணறினர். அதனால், 7-0 என்ற கோல் கணக்கில் அட்டகாச வெற்றியை பதிவு செய்த ஜப்பான் வீராங்கனைகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இந்த வெற்றியை அடுத்து, அடுத்தாண்டு பிரேசிலில் நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஆடவும் ஜப்பான் அணி தகுதி பெற்றது.

Related Stories: