×

இன்னும் உயிரோடு இருந்தால் இஸ்ரேல் பிரதமரை கொல்வோம்: ஈரான் துணை ராணுவம் சூளுரை; வளைகுடாவில் விரிவடைகிறது போர்

துபாய்: அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஏவுகணை, டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மீது ஈரான் புரட்சிகர காவல் படை திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் நெதன்யாகு தாக்கப்பட்டாரா இல்லையா என தெளிவாக தெரியவில்லை என ஈரான் கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி நெதன்யாகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டது.

அதில், நெதன்யாகுவுக்கு 6 விரல்கள் இருப்பது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்றும், நெதன்யாகு உயிருடன் இல்லை என்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வீடியோ சர்ச்சையானதும் அதை நெதன்யாகு அலுவலகம் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியது இன்னும் சந்தேகத்தை அதிகரித்தது. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை கொல்வதாக வீடியோவில் தோன்றி பேசும் நெதன்யாகு எங்கிருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது.

இந்நிலையில், இந்த தகவல்களை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. துருக்கி செய்தி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பேட்டியில், ‘‘அவை போலி செய்திகள். நெதன்யாகு நலமுடன் உள்ளார்’’ என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஈரானின் துணை ராணுவமான புரட்சிகர காவல் படை நேற்று விடுத்த அறிக்கையில், ‘குழந்தைகளைக் கொன்று குவிக்கும் குற்றவாளி நெதன்யாகு இன்னும் உயிருடன் இருந்தால், நாங்கள் அவனைத் தேடிப் பிடித்து, முழு பலத்துடன் அழிப்போம்’ என கூறி உள்ளது.

இதற்கிடையே, 16வது நாளாக நேற்றும் போர் நீடித்த நிலையில், கார்க் தீவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா மீதான போரை ஈரான் விரிவுபடுத்தி உள்ளது. இதுவரை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மட்டுமே ஈரான் தாக்கி வந்த நிலையில், முதல் முறையாக நேற்று அமெரிக்க ராணுவ தளங்கள் அல்லாத ஐக்கிய அரபு எமிரேட்சின் 3 துறைமுகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது ஏவுகணை, டிரோன்களை ஏவியது. இதுதொடர்பாக அங்குள்ள மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

பக்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் ஈரானில் இருந்து நேற்று காலை ஏவப்பட்ட டிரோன், ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கூறி உள்ளது. கார்க் தீவு மீது தாக்குதல் நடத்த ஐக்கிய அரபு எமிரேட்சின் 3 துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தியிருப்பதாக ஈரான் குற்றம்சாட்டி உள்ளது. வளைகுடா நாடுகளில் குடிமக்கள் வசிக்கும் பகுதிகளை ஈரான் குறிவைத்திருப்பது புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Israel ,Iran ,Gulf ,DUBAI ,United ,States ,US ,Benjamin Netanyahu ,
× RELATED 98-வது ஆஸ்கர் விருதுகள்: 6 விருதுகளை...