பாஜகவின் சார்பு அணிகள் சிபிஐ, ஈடி, ஈசி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

திருப்பத்தூர்: பாஜகவின் சார்பு அணிகளாக சிபிஐ, ஈடி(அமலாக்கத்துறை), ஈசி (தேர்தல் ஆணையம்) செயல்படுகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். திருப்பத்தூரில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் தமிழக துணை முதலமைச்சரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியாவிலேயே டபுள் டிஜிட் 11.19 என்ற அடிப்படையில் இன்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பாஜக தமிழகத்தில் நேர்வழியில் உள்ளே நுழைய முடியாது என்பதால் பல்வேறு குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்து வருகிறது. ஆனால் அது பலிக்காது. பாஜகவின் சார்பு அணிகள் என்னவென்றால் சிபிஐ, ஈடி(அமலாக்கத்துறை), ஈசி (தேர்தல் ஆணையம்). இதையெல்லாம் வைத்து மிரட்டி பாஜக சார்பு அணிகள் செயல்பட்டு மிரட்டி அதிமுக கூட்டணி உருவாகி உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் திருச்சி வந்திருந்தார். 10 நாட்களுக்கு முன்பு மதுரை வந்திருந்தார். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வருவார். ஆனால் எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு வழங்கமாட்டார். தேர்தல் முடிந்ததும் அதிமுகவை பாஜக விழுங்கி விடும். பீகாரில் நிதீஷ்குமார் 10 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர்தான் வெற்றி பெற்று முதலமைச்சரானார். இன்று அவரை ஓரம் கட்டிவிட்டு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 10 முறை முதலமைச்சராக இருந்த பீகார் முதல்வருக்கு இந்த நிலைமை என்றால் காலில் ஊர்ந்து சென்று போய் பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன நிலைமை என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் ஒரு முதுகெலும்புள்ள முதல்வர் இருக்க வேண்டும். அது எடப்பாடியால் நிச்சயமாக முடியாது. பாஜகவை எதிர்க்க கூடிய சக்தி நமது தலைவருக்கு மட்டும்தான் உள்ளது. மக்களும் அதை உணர்ந்துள்ளனர். ஒரு பழமொழி உள்ளது ஜாடிக்கேத்த மூடி என்று. இப்போது மோடிக்கு ஏற்ற ஒரு அடிமையாக எடப்பாடி இருந்து வருகிறார். நிச்சயம் இந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: