×

கட்சி பெயரை கடன் வாங்கிய சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர். ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கில் 2வது குற்றவாளியான சசிகலா சிறைக்கு சென்ற பிறகு இவரை அதிமுகவினர் கண்டுகொள்ளவே இல்லை. சிறையில் இருந்து திரும்பி வந்த பின் இதே நிலைமைதான் நீடித்தது. இவர் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த டிடிவி.தினகரன் எடப்பாடியுடன் கைகோர்த்து விட்டார். இதனால் தான் அரசியலில் இருக்கிறேன் என்பதை காட்ட வேண்டிய கட்டாய நிலைக்கு சசிகலா தள்ளப்பட்டார்.

இதனால், கடந்த பிப். 14ம் தேதி கமுதி அருகே பொதுக்கூட்டம் நடத்தி தனது அரசியல் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார் சசிகலா. விரைவில் தனது கட்சியின் ெபயரை அறிவிப்பதாகவும் கூறியிருந்தார். நேற்று முன்தினம் தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை சசிகலா அறிவித்தார். கட்சியின் பெயர், ‘அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ என்றும், தனது கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்றும் அறிவித்தார். தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கவில்லை. அவருக்கு சின்னம் ஒதுக்கியதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால், திடீரென்று கட்சியின் பெயரும், சின்னத்தையும் அறிவித்துள்ளாரே? இது எப்படி சாத்தியம் என்று பார்த்தால், இதன்பின்னால் கிட்டதட்ட 10 ஆண்டு கால அரசியல் பிளாஷ் பேக் இருக்கிறது.

மதுரை, எஸ்எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர், தன் பெயரை எம்ஜிஆர் சிவா என்ற அடைமொழியுடன், தன்னையும் எம்ஜிஆரைப் போலவே மாற்றிக் கொண்டார். தனது அரசியல் ஆர்வத்தால், மதுரை எஸ்.எஸ்.காலனியில் 2016-17 காலகட்டத்தில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியையும், அதன் நிறுவன தலைவராக தன் பெயரையும் பதிவு செய்து வைத்திருந்தார்.

இதையடுத்து அவரை அழைத்து பேசிய சசிகலா, ஏற்கனவே பதிவு செய்த அரசியல் கட்சியையும், அதற்காக ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னமான தென்னந்தோப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என பேசி முடித்து அறிவித்துள்ளார். இதில், கட்சி பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்திக் கொள்வது என்றும், சக்கரவர்த்தி பதிவு செய்த கொடியை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்துதான், சக்கரவர்த்தி பதிவு செய்த கொடியின் நடுவில் உள்ள நீல நிறம் மற்றும் எம்ஜிஆரின் படத்தை நீக்கிவிட்டு, அதிமுகவின் கொடியைப் போலவே கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் நடுவில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளார்.

Tags : Sasikala ,Jayalalithaa ,Jayalalitha ,
× RELATED அதிமுக என்ற கட்சியோடு தனது...