×

உலக பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி ஸ்திரப்படுத்தல் நிதி: மக்களவையில் துணை மானிய கோரிக்கை நிறைவேற்றம்

புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியின் காரணமாக நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை நேற்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விவகாரத்தை எழுப்பினார்கள். ஈரான் உடனான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவை தலைவர் அவையை 12 மணி வரைக்கும் ஒத்திவைத்தார். தொடர்ந்து அவை மதியம் 12 மணிக்கு தொடங்கிய போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். அவையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள மறுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்தார்.

கிரண் ரிஜிஜூ பேசுகையில், ” பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து இதே பாணியில் நடந்து கொண்டால் மக்கள் அவர்களை கடுமையாக தண்டிப்பார்கள். காங்கிரஸ் தலைவர் தன்னை மாற்றிகொள்ள மறுக்கிறார். இப்போது உறுப்பினர்களும் அவரைப்போலவே நடந்து கொள்கிறார்கள். அவர்களது தலைவர் தட்டு, டம்ளரை ஏந்தியபடி நாடகத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதுபோன்ற நாடகத்தனமான செயல்கள் மூலமாக மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் அவர்களால் இதுவரை ஆட்சிக்கு வரமுடியவில்லை. இன்னும் திருந்துவதற்கு அவகாசம் இருக்கிறது. இல்லையெனில் நாட்டின் மக்கள் உங்களை கடுமையாக தண்டிப்பார்கள்” என்றார். எதிர்க்கட்சியினர் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்ததால் அவைத் தலைவர் அவையின் நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

பிற்பகல் 2 மணிக்கு அவை தொடங்கியதும் மக்களவையில் மானியங்களுக்கான கூடுதல் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஸ்திரப்படுத்தல் நிதி, உலகளாவிய பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வதற்கு இந்தியாவுக்குத் தேவையான நிதிச் சுதந்திரத்தை வழங்கும். மானியங்களுக்கான கூடுதல் கோரிக்கைகளின் 2வது தொகுப்பின் மூலம், நடப்பு நிதியாண்டில் கூடுதலாக மொத்தம் 2.81லட்சம் கோடி ரூபாய் செலவு செய்வதற்கு அரசு மக்களவையின் ஒப்புதலைக் கோரியுள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் 80ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கணக்கிடப்பட்டுள்ளதால் நிகர கூடுதல் பணச் செலவினம் ரூ.2,01லட்சம் கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டிற்கான (2025-2026) ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளுக்கு இணையாகவே இது கணக்கிடப்பட்டுள்ளது. 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி செலவினங்கள் அதிகரிக்கவில்லை” என்றார். எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இரண்டாவது கட்ட துணை மானியக் கேரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

* 8 எம்பிக்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும்
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தொடரில் ஒழுங்கற்ற நடத்தை காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட 7 காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் ஒரு சிபிஐ எம் எம்பி ஆகியோரின் சஸ்பெண்டை ரத்து செய்யுமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தை சபாநாயகரிடம் எடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்தார். மேலும் அலுவல் ஆய்வுக்குழுகூட்டத்தின்போதும், காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா இந்த விவகாரத்தை சபாநாயகர் ஒம் பிர்லா மற்றும் கிரண் ரிஜிஜூ ஆகியோரிடம் மீண்டும் எழுப்பினார்.

* எதிர்க்கட்சிகள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் எல்பிஜி நெருக்கடி பிரச்னை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்பிஜி நெருக்கடி என்ற பதாகைகளை ஏந்தி ஆளும் பாஜ அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். எரிவாயு சிலிண்டர்கள் எங்கே போயின? என்று கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களுடன் காங்கிரஸ் மற்றும் பிற இந்திய கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்களும் இணைந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* மாற்றுப்பாலினத்தவர் என்ற சொல்லுக்கு துல்லியமான வரையறையை வழங்குவதையும், அத்தகையோருக்கு இழைக்கப்படும் தீங்கீன் தீவிரத்தை பிரதிபலிக்கும் வகையில் தரப்படுத்தப்பட்ட தண்டனைகளை வழங்குவதையும் நோக்கமாக கொண்ட மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு)திருத்த மசோதாவை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திரகுமார் அறிமுகம் செய்துவைத்தார்.

Tags : Lok Sabha ,New Delhi ,West Asia ,
× RELATED தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம்...