மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுமுறை கேட்ட வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு; எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என கருத்து

புதுடெல்லி: வேலை செய்யும் பெண்களுக்கு பணியிடங்களில் மாதவிடாய் காலங்களில் கட்டாய விடுப்பு வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்க ஒன்றிய அரசு, மாநில அரசு, மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் சைலேந்திரா திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கேரளாவில் அரசு பல்கலைக்கழகங்களில் மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த முடிவானது பாலின சமத்துவ சமூகத்தை உறுதிப்படுத்தும் விஷயம் என்று கேரளா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது, அதேபோன்று பல தனியார் நிறுவனங்களில் கூட மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார். அப்போது குறுகிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், \\”மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால் கட்டாய மாதவிடாய் விடுமுறை என்பது சட்டமாக இயற்றப்பட்டாலோ, அல்லது வரையறுக்கப்பட்டாலோ அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களை பணி அமர்த்துவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள்.

பெண்கள் அரசு பணிகளுக்கோ, நீதித்துறை வேலைக்கோ செல்வது கூட தடைப்பட்டுவிடும். இது அவர்களின் பணிகளை முழுமையாக முடக்குவதோடு நீங்கள் வீட்டிலேயே இருங்கள் என்று அவர்களை நிர்பந்திப்பது போல் ஆகிவிடும். அதுபோன்ற சட்டம் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்கள் ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்ற ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கி விடும். மாதவிடாய் என்பது பெண்களுக்கு நடக்கும் ஒரு மோசமான விஷயம் என்ற ஒரு மனநிலையையும் ஏற்படுத்தும். அது அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும். எனவே இந்த மனுவை ஏற்க முடியாது. மேலும் இதில் உள்ள கோரிக்கை தேவையில்லாத ஒரு அச்சத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது” என திட்டவட்டமாக தெரிவித்ததுடன், இதுடொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: