பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆணவ கொலைகளைத் தடைசெய்யும் ‘இவர் நம்மவர்’ மசோதா 2026 வுக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து ஒப்பதல் பெறவும் முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் மூலம் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு எதிராக ஆணவ கொலைகள் போன்ற குற்றங்கள் தொடர்ந்து நிகழுவதை தடுக்கும் நோக்கத்தில் புதிய சட்ட மசோதா கொண்டுவருவதாக கடந்த 6ம் தேதி முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த 2026-27ம் நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்தார்.
அதை செயல்படுத்தும் வகையில் ‘‘இவர் நம்மவர் 2026’’ என்ற பெயரில் புதிய மசோதா உருவாக்கப்பட்டது. அந்த சட்ட மசோதாவுக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஒரு ஆண் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அவளுடன் உடலுறவு கொண்டு, பின்னர் சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்தால், அத்தகைய வழக்கை பாலியல் வன்கொடுமையாகக் கருத இந்த மசோதாவில் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. குடும்ப அழுத்தம் அல்லது பிற சாதி சார்ந்த காரணங்கள் உட்பட சாதியை அடிப்படையாகக் கொண்டு திருமணம் செய்ய மறுக்கும் நபருக்கு 5 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனையும், அது ஆயுள் வரை நீட்டிக்கப்படலாம்.
