- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- முதலமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. ஸ்டாலின்
- முதல்வார்
- மு. கே.
- சென்னை ஊடகவியலாளர்கள் மன்றம்
- ஸ்டாலின்
சென்னை: பத்திரிகையாளர் மன்றத்தினரின் கோரிக்கையை ஏற்று மருத்துவக் காப்பீடு, வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தின் நிர்வாகிகள் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, பத்திரிகையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் மனுவாக அளித்தனர். அதில், பத்திரிகையாளர்களுக்கு இடம் அல்லது வீடு வழங்க வேண்டும், பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், அங்கீகார அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவகாப்பீட்டு திட்டம் உள்ளது.
அதை அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், அச்சு ஊடகங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், காட்சி ஊடகத்துக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை கூறியிருந்தனர். இந்த கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனமுடன் கேட்டார். பின்னர் தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரன், செய்தித்துறைச் செயலாளர் ராஜாராமன், செய்தித்துறை இயக்குநர் வைத்தியநாதன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று பத்திரிகையாளர் மன்றத்தின் பிரநிதிகள் முதல்வரை சந்தித்தனர். அப்போது அவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில் உயர்வு, மருத்துவக் காப்பீடு மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தனர். பத்திரிகையாளர்கள் மன்றத்தினரின் கோரிக்கையினை ஏற்கும் வகையில் பத்திரிகையாளர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் மாதம் ரூ.12,000 லிருந்து ரூ.15,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.6,000 லிருந்து ரூ.7,500 ஆகவும் உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்.
அதேபோல, அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் குடியிருக்க வீடு அல்லது வீடுகட்ட நிலம் ஒதுக்கித் தரவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டுமனைகள் வழங்க ஏற்பாடு செய்யவும், இதற்கு பத்திரிகையாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் துவக்கி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் மன்றத்தினரின் ஏனைய கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கோரிக்கைகளை ஏற்று உத்தரவுகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், சென்னை பத்திரிகையாளர் சங்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர் சங்கம், செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.
* பத்திரிகையாளர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் மாதம் ரூ.12,000 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படுகிறது.
* குடும்ப ஓய்வூதியம் ரூ.6,000 லிருந்து ரூ.7,500 ஆக
அதிகரிப்பு.
* அனைவருக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
* சென்னை பத்திரிகையாளர்கள் குடியிருக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டுமனைகள் வழங்க ஏற்பாடு.
