நன்றி குங்குமம் தோழி
நமக்கு ஆற்றலும் ஆயுளும் தருபவை உணவுகள். அவை ஊட்டச்சத்து மிக்கவையாக இருந்தால் மட்டுமே உண்மையான வளர்ச்சியும் ஆரோக்கிய மும் கிடைக்கும். உடை, அலங்காரத்தில் நாகரிகத்தை பின்பற்றுவது போல் உணவிலும் அதை கடைபிடிக்கிறோம். அது உடலுக்கு நல்லதல்ல என்பதே பல உணவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைவரும் வெளி உணவுகளுக்கு அடிமையாகி வருகிறோம்.
துரித உணவுகளால் பல உடல் சார்ந்த பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கான தீர்வு நம் எல்லோரது வீட்டின் சமையல் அறையிலும் தோட்டத்திலேயும் இருக்கின்றது என்கிறார் ‘நற்பவி ஹனி’ தயாரிப்பாளர் சந்தன சரஸ்வதி. அவரது தயாரிப்புகளில் ‘ரோஜா குல்கந்து மற்றும் குமரி பக்குவம்’ இரண்டும் அதிமுக்கியமானதாகும். அவரிடம் உரையாடியதிலிருந்து…
‘‘திருநெல்வேலி முன்னிறுபள்ளம் கிராமத்தில்தான் தேன் பிசினஸ் செய்து வருகிறோம். கொரோனா காலத்தில்தான் மக்கள் அனைவரும் ஆரோக்கியமான உணவினை நாட ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்திதான் அனைவருக்கும் தேவைப்பட்டது. நானும் என் குடும்பத்திற்காக அதிக நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை தேடினேன். அதில் தேன்தான் முதலிடத்தில் இருந்தது. அப்போது ஹீலர் பாஸ்கர், ஆன்லைனில் தேனீ வளர்ப்பு குறித்து ஒருநாள் பயிற்சி அளிப்பது தெரிய வந்தது. அதில் பங்கு பெற்றேன். கணவரிடம் சொன்ன போது, நான்கு தேன் வளர்ப்பு பெட்டி வாங்கிக் கொடுத்தார். என் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க ஆரம்பித்தேன்’’ என்றவர் தேனீக்கள் வளர்ப்பு பற்றி சுவையாக கூறத் தொடங்கினார்.
‘‘தேனீக்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தில எங்கு பூக்கள் இருந்தாலும் அதிலுள்ள தேன்களை சேகரித்து வந்துவிடும். ராணி தேனீ மட்டும் கூட்டுக்குள்தான் இருக்கும். நான் பெட்டி வெச்ச நேரம் வேப்ப மரம், முருங்கை மரம் பூ பூக்கும் காலம் என்பதால் முதல் அறுவடையிலேயே 2 கிலோ தேன் கிடைச்சது. என் வீட்டுக்குப் போக என் கணவரின் நண்பர்களுக்கு கொடுத்தோம். தேன் சுவையாக இருப்பதாக கூறியது மட்டுமில்லாமல் தேன் கிடைக்கும் போது தருமாறு கேட்டார்கள். அதன் பிறகு பத்து பெட்டிகளை வாங்கி தோட்டத்தில் வைத்தேன். நண்பர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தது இன்று ஒரு பிசினஸாக மாறியது. ஆர்டர் அதிகரிக்க எங்க பகுதியில் உள்ள முருங்கை விவசாயின் தோட்டத்தில் 100 பெட்டிகளை வைத்தேன்.
அதில் தேனீக்கள் வரும் நிறைய தேன் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், முதலில் 25 பெட்டிகளில் இருந்த தேனீக்கள் பறந்துவிட்டன. பிறகு அடுத்த 25 பெட்டிகளில் இருந்த தேனீக்களும் பறந்து போயின. என்னுடைய உழைப்பு வீணாகிவிட்டது என்று பயந்தேன். ஒரு தொழிலில் முழுமையாக அனுபவம் பெறாமல் அகல கால் வைக்கக்கூடாதுன்னு புரிந்துகொண்டேன்.
அந்த சமயத்தில் கோவையில் உள்ள வேளாண் கல்லூரியில் ஒருநாள் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிப்பது குறித்து கேள்விப்பட்டேன். அங்கு அடிப்படை பயிற்சிதான் அளித்தார்கள். அங்கு பயிற்சியாளராக இருந்த பாபுவிடம் தேனீக்கள் பறந்து போனதையும், தேனடையில் புழுக்கள் இறந்து இருந்ததைப் பற்றி கூறினேன். அவர் தேனீக்களை தாக்கும் ஒரு வகையான வைரஸ் நோய் குறித்து கூறியது மட்டுமில்லாமல் அதிலிருந்து தேனீக்களை எவ்வாறு மீட்டெடுக்கலாம் என்று விவரித்தார்.
அவர் சொன்ன முறையினை பின்பற்றினேன். ஒரு மாதத்தில் காலியாக இருந்த 50 பெட்டியிலும் தேனீக்கள் சேர்ந்தன. நானும் அவர் சொன்னது போல் ஒவ்வொரு பெட்டிகளையும் முறையாக பராமரிக்க ஆரம்பித்தேன். தேனும் அதிகம் கிடைத்தது. ஜனவரி முதல் ஜூன் வரை சீசன் தேன் எடுக்கலாம். மற்ற மாதங்களில் கூட்டைப் பிரித்து தேனீக்களை இனப்பெருக்கம் செய்வோம். அதனைத் தொடர்ந்து தேனில் இருந்து மதிப்பு கூட்டுப்பொருளான ரோஜா குல்கந்து தயாரிக்க திட்டமிட்டேன்’’ என்றவர் அதன் தயாரிப்பு மற்றும் நன்மைகள்
பற்றியும் விவரித்தார்.
‘‘இயற்கை முறையில் வளர்க்கப்படும் பன்னீர் ரோஜாவினை விவசாயிடம் இருந்து வாங்கினேன். அதனை ஒருநாள் உலர்த்தி, பனங்கற்கண்டுடன் இடித்து, சுத்தமான மண் பானையில் ஒரு கிலோவிற்கு முக்கால் பங்கு தேன் சேர்த்து மூன்று நாட்கள் அவ்வப்போது கிளறி வைக்க வேண்டும். பிறகு 45 நாட்கள் வெயிலிலும் அடுத்த 45 நாட்கள் நிழலிலும் தேனில் ஊற வைத்தால் குல்கந்து ரெடி. இதனை சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமென்றாலும் சாப்பிடலாம்.
வயிற்றுப் புண்ணுக்கு உகந்தது. இதே முறையில் தேனில் ஊற வைத்த இஞ்சி, பூண்டு, அத்திக்காயும் விற்பனை செய்கிறோம். மேலும், இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சாறு, ஆப்பிள் வினிகர் மற்றும் தேன் சேர்த்து ‘உயிர் காக்கும் பானம்’ என்ற பெயரில் சிரப் ஒன்றை விற்பனை செய்கிறோம். இது போல் தேன் கொண்டு 13 பொருட்களை விற்பனை செய்கிறோம். இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ரத்தம் உற்பத்தியாகும்’’ என்றவர், பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்களுக்கு மருந்தான ‘குமரி பக்குவம்’ தயாரிப்பு பற்றியும் விவரித்தார்.
‘‘சோற்றுக் கற்றாழையில் செய்யப்படும் லேகியம்தான் குமரி பக்குவம். இன்று உலகம் முழுதும் கர்ப்பப்பை சார்ந்த நோய்களும் அதனால் ஏற்படும் குழந்தையின்மை பிரச்னையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம், நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம்தான். குழந்தையின்மை மற்றும் கர்ப்பம் சார்ந்த பிரச்னைகளுக்கு சரியான தீர்வு இந்த குமரி பக்குவம். இளம்பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு போகும் தமிழர்கள் அங்கு வாழும் தமிழ் நண்பர்களுக்கு தேன், நெய் ஆகியவற்றை வாங்கிச் செல்வதால் துபாய், சிங்கப்பூர், யூகே போன்ற நாடுகளிலும் எங்கள் தயாரிப்பு ஃபேமஸ். படிப்புல நான் டாப்பர். ஆனால், தொடர்ந்து படிக்க முடியல. என்னுடைய நிறுவனத்தை 2030க்குள் பெரிய நிறுவனமாக மாற்றுவேன்’’ என்கிறார் சுய சக்தி பெண் விருது பெற்ற சந்தன சரஸ்வதி.
தொகுப்பு: கலைச்செல்வி
