காளை – கரடி – நாய்: சசிகலாவும் குட்டிக்கதை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க டோய்

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசிய சசிகலா, நேற்று திண்டிவனத்தில் முன்னாள் கவுன்சிலர் முகம்மது ஷெரிப் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு இப்தார் நோன்பு நிகழ்வில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு குட்டிக் கதை சொல்லப் போகிறேன். ஒரு ஊர்ல ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இக்கரையில 2 பேர் நின்று கொண்டு இருந்தனர். அக்கரைக்கு செல்வதற்கு ஓடமும் இல்லை. இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது.

அது ஆற்றில் பாய்ந்து நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஒருத்தர் ஆற்றில் குதித்து, அந்த காளை மாட்டின் வாலை கெட்டியாக பிடித்துக் கொண்டார். காளை மாடு சுலபமாக அவரை இழுத்து சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. அடுத்தவர் பார்த்தார், நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று? அப்போது ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவரும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலை பிடித்தார். கனமான மனிதனை இழுத்துக் கொண்டு அந்த நாயால் நீந்த முடியவில்லை, திணறியது. அவர்கள் போக வேண்டிய திசை வேறு, ஆனால் போய்க் கொண்டிருந்த திசையோ வேறு.

மூன்றாவதாக ஒரு ரகம் இருக்கிறது. ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்ற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதை பற்றுகிறான். நீண்டநேரம் ஆகியும் அவன் கரை திரும்பவில்லை. கரையில் இருப்பவர்கள் கத்துகிறார்கள், அதை விட்டுவிடு என்று, அவன் நடுஆற்றில் இருந்து கத்துகிறான், நான் இதை எப்பவோ விட்டுட்டேன், இப்ப இது (கரடி குட்டி) என்னை விடமாட்டேங்குது என்று. இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது?.

தவறாக பற்றுகிறவர்கள் தடுமாறி போகிறார்கள். நீங்கள் எல்லாம் இந்த காளையின் வாலை பிடித்துக் கொண்டே இருக்கிறீர்கள், கண்டிப்பாக கரைசேர்ந்து விடுவீர்கள். தமிழக மக்களின் பேராதரவுடன் வரும் சட்டசபை தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுத்து வெற்றி வாகை சூடுவோம் என்றார். இந்த கதையில் காளை மாடு சசிகலா என்று புரிகிறது. கரடி பாஜ என்றும், அதை பிடித்திருப்பவர் எடப்பாடி என்றும் புரிகிறது. நாய் வாலை பிடித்தவர் யார் என்றுதான் தெரியவில்லை என அங்கிருந்தவர்கள் நொந்து கொண்டார்கள்.

Related Stories: