சேலம், மார்ச் 12: சேலத்தாம்பட்டியில் புதிய முழுநேர ரேஷன் கடையை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று திறந்துவைத்தார். சேலம் அடுத்த சேலத்தாம்பட்டியில், புதிய முழுநேர ரேஷன் கடை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு, புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பேசுகையில், `சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையால் நடத்தப்பட்டு வரும் சேலத்தாம்பட்டி ரேஷன் கடையுடன் இணைக்கப்பட்டிருந்த மீன்வாயன் தெரு, கருப்பனூர், பாறைக்காடு, கிழக்கு வட்டம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 534 குடும்ப அட்டைகளைப் பிரித்து, சேலத்தாம்பட்டி 2 என்ற புதிய முழுநேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கடையின் மூலம் 1,792 உறுப்பினர்கள் பயனடைவார்கள். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம், சேலம் மாவட்டத்தில் 1,05,918 குடும்ப அட்டைகளில் உள்ள 1,12,463 பயனாளர்களுக்கு அவர்களின் இல்லங்களிலேயே பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது,’ என்றார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், துணை பதிவாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
