×

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கொடநாடு காட்சி முனையில் வாகன நிறுத்துமிடம் விரிவாக்கம்

கோத்தகிரி : கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப வாகன நிறுத்துமிடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மேலும் அங்கு சுற்றுலா பயணிகள் அமர்ந்து இயற்கை அழகை ரசிக்க நாற்காலிகள் அமைத்தல், தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளும் நடக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று கோத்தகிரி அருகே உள்ள ெகாடநாடு காட்சி முனை ஆகும்.

இந்த காட்சி முனை கோத்தகிரியில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்துவிட்டு சமவெளி பகுதிகளுக்கு செல்லும்போது கோத்தகிரி வழியாக ெகாடநாடு காட்சி முனைக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து செல்வர்.

இந்த காட்சி முனையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப தொலைநோக்கி மையம், காட்சி முனையில் பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்து தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ள காட்சி, பவானிசாகர் அணையின் காட்சி, ராக் பில்லர் ஆகியவற்றை காண உள் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.

ஆண்டுதோறும் கோடை காலங்களில் மட்டுமே களைகட்டும் கொடநாடு காட்சி முனை தற்போது விழாக்கால விடுமுறை, வார விடுமுறை, பள்ளி அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு விடுமுறை காலங்களிலும் களை கட்டுகிறது.

வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் இங்கு வருகின்றனர். தற்போது கோடை சீசன் வர உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி காட்சி முனையில் தற்போது தொலைநோக்கி கருவி அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

இங்குள்ள வாகன நிறுத்துமிடம் மிகக் குறைந்த பரப்பளவு கொண்டதாக உள்ளது. இது இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த போதுமானதாக இல்லாமல் இருந்தது. எனவே தற்போது உள்ள வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்தப்படுகிறது.

கோத்தகிரியில் இருந்து கொடநாடு காட்சி முனைக்கு வரும் அரசு பேருந்துகள் திரும்பும் இடமாக கொடநாடு காட்சி முனை பகுதி உள்ளது.அதிக சுற்றுலா பயணிகள் வந்து வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாத சூழலில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது.

இந்த கோடை சீசனிலும் அதிக சுற்றுலா பயணிகள் வரும் பட்சத்தில் அவர்களின் வாகனங்களை நிறுத்த காட்சி முனைக்கு முன்பு உள்ள சாலையோரத்தில் இருபுறமும் உள்ள இடத்தை சீர்செய்து வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அமர்ந்து இயற்கை அழகை ரசிக்க நாற்காலிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் நாற்காலிகளை தூய்மைப்படுத்தி தயார் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.

Tags : Kodanadu ,Kotagiri ,Kodanadu Scenic Point ,Neelgiri ,
× RELATED தமிழ்நாட்டில் ரூ.5,650 கோடி மதிப்புள்ள...