மேலூர், மார்ச் 11: மேலூர் அருகே திருவாதவூர் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சாமி கும்பிடுவதில் முதல் மரியாதை தொடர்பாக மணிகண்டன்(36) மற்றும் மணி(53) ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மணி அவரது தரப்பை சேர்ந்த 7 பேருடன் வந்து மரக்கட்டை மற்றும் பாட்டில்களால் மணிகண்டனை தாக்கியுள்ளார். இதனை அவரது சகோதரர் அர்ஜூன்(32), உறவினர் அருணாச்சலம்(55) ஆகியோர் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மணி தரப்பினர், அவர்களையும் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அர்ஜூன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மணிகண்டன், அருணாச்சலம் ஆகியோர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற மேலூர் போலீசார், அர்ஜூன் உடலை மீட்டு, மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு ெசய்த ேபாலீசார், மணி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த அஸ்வின், அழகுபாண்டி, கண்ணதாசன், அய்யனார், சந்தோஷ், சேகர், விஜய் என, 8 பேரை கைது செய்தனர். கோயில் வழிபாட்டில் மரியாதை பெறுவதில் ஏற்பட்ட இந்த படுகொலை சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
