இந்தியா உலகின் இரண்டாவது பெரிய எல்பிஜி இறக்குமதியாளராக உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 80-90 சதவீதம் இறக்குமதி நடைபெறுகிறது. தற்போது ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்டதால், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக போர் காரணமாக இந்த பாதை தடைபட்டதால், வணிக ரீதியான சிலிண்டர்கள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் தங்கள் இருப்பு சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. பல உணவகங்கள் ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன அல்லது மூடும் அபாயத்தில் உள்ளன. இந்த நெருக்கடி டெலிவரி துறையை நேரடியாக தாக்குகிறது.
ஸ்விக்கி மற்றும் ஸோமாடோ நிறுவனங்கள் ஹோட்டல்களுடன் இணைந்து செயல்படுவதால், உணவகங்கள் மூடினால் ஆர்டர்கள் குறையும். இதனால் டெலிவரி ஆர்டர்கள் 50% வரை வீழ்ச்சியடையலாம் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அளவில் இத்துறையில் சுமார் 10-12 லட்சம் டெலிவரி பார்ட்னர்கள் (கிக் வொர்க்கர்கள்) பணியாற்றி வருகின்றனர்.
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த வேலையை நம்பியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 18-30 வயதுக்குட்பட்டவர்கள்; பலர் படித்தவர்களாக இருந்தும் முறையான வேலை கிடைக்காததால் இதை முழு நேர அல்லது பகுதி நேர வருமானமாக கொண்டுள்ளனர்.
வேலை இழப்பு ஏற்பட்டால், இது பெரிய சமூக-பொருளாதார பிரச்னையாக மாறும். பல குடும்பங்கள் இவர்களின் வருமானத்தை சார்ந்துள்ளன. அரசு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது; வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வணிக பயன்பாட்டுக்கு தீர்வு உடனடியாக வரவில்லை என்றால், உணவு டெலிவரி துறை முழுவதும் பாதிப்படையும்.
மாற்று எரிபொருள் (மின்சார சமையல்) விருப்பங்கள் பரிசீலிக்கப்பட்டாலும், உடனடி செலவு மற்றும் உள்கட்டமைப்பு சிக்கல்கள் உள்ளன. அரசு மற்றும் தொழில்துறை உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் சிக்கும்.
