×

யார் ‘பாஸ்’… பெயில்…? வளர்த்த கிடாவுடன் மல்லுக்கட்டும் மாஜி

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ மற்றும் அதிமுக மாவட்ட செயலாளராக இருப்பவர் செந்தில்நாதன். இந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவாகவும், மாஜி அமைச்சராகவும் இருந்தவர் பாஸ்கரன். மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) என 4 தொகுதிகள் உள்ளன. இதில், மானாமதுரை (தனி) தொகுதி போக மற்ற இரு தொகுதிகளிலும் இவர்களால் போட்டியிட முடியுமென்றாலும், இருவரும் சிவகங்கை தொகுதியை மட்டும் தான் கேட்கின்றனர். அதற்காக இருவரும் மல்லுக்கட்டாத குறையாக மோதிக் ெகாண்டிருக்கின்றனர்.

மற்ற தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிகவும் கடினம். சிவகங்கை தொகுதி என்றால் முடிந்தவரை மோதிப்பார்க்கலாம். வெற்றி, தோல்வியை பிறகு பார்த்துக் கொள்வோம் என்ற கணக்கில் தான் இருவரும் காய் நகர்த்தி வருகிறார்கள். கடந்த 2016 தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாஸ்கரன். அந்த தேர்தலில் பல சீனியர்கள் சீட் கேட்டு காத்திருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் சிவகங்கை யூனியன் தலைவராக இருந்த பாஸ்கரனுக்கு சீட் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அவருக்கு அடுத்த அதிர்ச்சியாக அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

பாஸ்கரன் அமைச்சராக இருந்த காலத்தில் இரட்டை குழல் துப்பாக்கி போலவும், அமைச்சரின் நிழல் போலவும் வலம் வந்தவர் தான் மாவட்ட செயலாளராக இருந்த செந்தில்நாதன். அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அமைச்சருடன், செந்தில்நாதனும் காட்சியளிப்பார். அந்தளவிற்கு இருவரும் மாவட்டத்தில் ஒன்றாக வலம் வந்தனர். குறிப்பாக அமைச்சரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் செந்தில்நாதன் இருந்தார். அப்படியே 5 ஆண்டுகள் கடந்து போக, கடந்த 2021 தேர்தலில்தான் தான் யார் என்பதை பாஸ்கரனுக்கு காண்பித்தார் செந்தில்நாதன். அந்த தேர்தலில் செந்தில்நாதனுக்கு காரைக்குடி, பாஸ்கரனுக்கு சிவகங்கை என்றிருந்தது. இதனை தனது செல்வாக்கால் மாற்றிய செந்தில்நாதன், பாஸ்கரனை போட்டியில் இருந்தே வெளியேற்றினார்.

சிவகங்கை தொகுதிக்கான எம்எல்ஏ சீட்டை பாஸ்கரனிடமிருந்து தட்டி தூக்கினார் செந்தில்நாதன். அதிலிருந்து பாஸ்கரனும், செந்தில்நாதனும் எதிரெதிராய் இருந்து கோஷ்டி அரசியல் செய்து வருகின்றனர். தன்னுடன் வளர்ந்து வந்த ஒருவர், தனக்கு எதிராக வந்தது மட்டுமின்றி, தனது அரசியல் இருப்பிடத்தையே காலி செய்வார் என பாஸ்கரன் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். அந்தளவிற்கு பாஸ்கரனை கடந்த 5 ஆண்டுகளில் ஓரங்கட்டியே எதிர் அரசியல் செய்து வருகிறார் செந்தில்நாதன்.

இதனால் கடும் அதிருப்தியில் சில காலம் ஒதுங்கியிருந்த பாஸ்கரன், ‘நான் ஏன் ஒதுங்க வேண்டும். ெசந்தில்நாதனை அரசியலை விட்டே ஓரங்கட்டுகிறேன்’ என புதுத் தெம்போடு தொகுதிக்குள் சுற்றத் தொடங்கியுள்ளார். அதே நேரம் எனக்கு தான் மீண்டும் சீட் என செந்தில்நாதன் தேர்தல் வேலைகளை தொகுதிக்குள் துவக்கிவிட்டார். இருதரப்பினரும் எங்களுக்கு தான் சீட் எனக் கூறி ஒருவருக்கொருவர் உள்ளடி வேலைகளை உக்கிரமாக துவங்கியுள்ளனர். இதனால், சிவகங்கை தொகுதியை யாருக்கு கொடுப்பது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

Tags : Mallukkuttam ,Senthilnathan ,MLA ,AIADMK ,Sivaganga ,Bhaskaran ,Karaikudi ,Tiruputtur ,Manamadurai ,
× RELATED காஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் போராட்டம்