×

விஜய் காபி மாதிரி பாஜ டீ மாதிரி ரெண்டையும் கலக்க முடியாது: ரைமிங்கில் அண்ணாமலை கலாய்

சென்னையில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: விஜய்யை பொறுத்தவரை ஏற்கனவே சொல்லிவிட்டோம். விஜய்யுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டார். டீயும், காபியும் கலக்காது என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன். ஏனென்றால் இரு கட்சிகளின் சித்தாந்தங்கள் வேறு. என்டிஏ கூட்டணி வலிமையாக இருக்கிறது. தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். பாஜ செய்தி தொடர்பாளராக இருந்த ஏ.என்.எஸ் பிரசாத், கட்சியினுடைய ஒரு மூத்த உறுப்பினர். ஒரு நல்ல செய்தி தொடர்பாளர். பத்திரிகையாளர்களிடம் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கக்கூடிய மனிதர். அதனால் மாநிலத் தலைவருடைய அறிவிப்பு, (பதவி பறிப்பு அறிவிப்பு) நாமெல்லாம் தேவையில்லாமல் எதற்கும் முடிச்சுப் போட்டுக்க வேண்டாம்.

வளைகுடா நாடுகளில் நடக்கும் போர் தொடர்பாக விவாதம் நடக்கும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டுவிட்டது. அதனால் ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் தொடர்பாக நிச்சயமாக விவாதம் நடக்கும். அதேபோல் சிலிண்டரை பொறுத்தவரை பெரும்பாலும் சவுதி அரேபியாவில் இருந்து வருகிறது. ஈரான் போரை தொடங்கிய பின் ஹார்முஸ் நீரிணை வழிப்பாதையை மூடிவிட்டது. பெட்ரோலிய பொருட்கள் பல்வேறு நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டாலும், சிலிண்டர் எரிவாயு அதிகமாக சவுதியில் இருந்தே வருகிறது. ஓட்டல்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எந்த அரசியலும் இல்லை. அவர்கள் தொழில் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். இது நிச்சயமாக அசாதாரணமான சூழல் தான். இவ்வாறு அவர் கூறினார்.

* மாசமா… 6 மாசமா… அன்புமணி கண்ணீர்
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாமக சார்பாக மகளிர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் ேநற்று நடந்தது. இதில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர், அன்புமணி பேசியதாவது: கடந்த 6 மாதமாக நடந்ததை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீங்கள். 6 மாதமாக மனஉளைச்சலில் இருக்கேன். ராமாதாஸ் ஐயா மனதில் துரோகிகள் நிறைய பேர் விஷத்தை விதைத்து விட்டார்கள். சாதிவாரி கணக்கேடுப்பு கேட்டோம். ஆனால் இனி அதை சமூக நீதி கணக்கெடுப்பாக சொல்லுவோம். சாதி வாரி என்றால் ஜாதியை பற்றி பேசுகிறோம் என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் சமூக நீதி கணக்கெடுப்பு எடுத்தால் தான் தெரியும், பெண்கள் எவ்வளவு பேர் உள்ளார்கள். வேலைக்கு செல்கிறார்களா என்ன என்று ஆராய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

* இந்தியா வெற்றி கூட்டணி என்டிஏ மூழ்கும் கூட்டணி: செல்வப்பெருந்தகை பளீச்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவதற்கான விருப்ப தொகுதிகளை தயார் செய்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். விருப்பமுள்ள தொகுதிகள் கிடைக்குமா என்பதை விட வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பதும் கூட்டணி கட்சிகளின் பாரத்தை தாங்கிக் கொள்வதும் தான் திமுகவின் வழக்கம். இந்தியா கூட்டணி வெற்றி கூட்டணி. இது தமிழகத்தை பாதுகாக்கும் கூட்டணி.தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு மூழ்கும் கூட்டணி, அதனால் எந்த கட்சிகளும் அங்கு செல்ல முன்வரவில்லை. எங்களுடன் வரிசையாக அணி வகுத்து நிற்கிறார்கள். தமிழ்நாடு மக்கள் தீர்மானித்துவிட்டனர், 210 தொகுதிகளுக்கு மேல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும். மிக விரைவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்க, பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருகிறார்கள். சோனியா காந்திக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அவரும் வருவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ராமதாசுடன் சசிகலா திடீர் சந்திப்பு: தவெகவுடன் கூட்டணியா?
அதிமுகவில் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியதால், கடந்த 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் புதிய அரசியல் கட்சியை சசிகலா தொடங்கினார். கட்சியின் கொடியை மட்டும் அறிமுகப்படுத்தி அவர், கட்சியின் பெயரை ஒரு வாரத்தில் தெரிவிப்பதாக அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் சேர முடியாததால், வேறு வழியின்றி தவெகவுடன் சசிகலா கூட்டணி அமைக்க பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், புதுவை அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில் சசிகலா, பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இரவு 10 மணிவரை நீடித்தது. இதுகுறித்து பாமக நிர்வாகி கூறுகையில், ‘‘சசிகலா, தவெக மற்றும் ராமதாஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். ராமதாசுடன் சசிகலா சந்திததாலும் மூத்த தலைவர்களை ஆலோசித்துவிட்டு நாளை(இன்று) கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடுவார்’’ என தெரிகிறது, என்றார்.

Tags : Vijay ,BJP ,Annamalai Kalai ,president ,Annamalai ,Chennai ,Nayinar Nagendran ,
× RELATED காஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் போராட்டம்