வேலூர், மார்ச் 11: வேலூர் தொரப்பாடியில் வீட்டின் 3வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்து 3 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தார். வேலூர், தொரப்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் மணி(30). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு சுதர்சன்(5),யோகேஷ்(3) என இரண்டு 2 குழந்தைகளுடன் சமீபத்தில் 3வதாக பிறந்த பெண் குழந்தை உள்ளது. மணி தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் 2வது மாடியில் வசித்து வருகிறார். கடந்த 8ம் தேதி மாலை 4.30 மணியளவில் மணி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். இந்துமதி தனது பெண் குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தாராம். சுதர்சனும், யோகேஷூம் பால்கனியில் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது யோகேஷ் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயடைந்த யோகேஷை, பெற்றோர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் யோகேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
