கே.வி.குப்பம், மார்ச் 3: கே.வி.குப்பம் அருகே நடைபெற்ற மாடு விடும் திருவிழாவில் நடைபெற்றது. இதில் காளைகள் முட்டி 10 பேர் காயமடைந்தனர். கே.வி.குப்பம் அடுத்த மாளியாப்பட்டு பகுதியில் தோசலாம்மண் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாடு விடும் விழா நடைபெற்றது. முன்னதாக விழாவிற்காக அமைக்கப்பட்ட சவுக்கு தடுப்புகள், ஓடுபாதையின் தரம், அதன் நீளம், சவுக்கு கட்டைகளின் பாதுகாப்பு தன்மை, உறுதித்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்யப்பட்ட பிறகே அதிகாரிகள் அனுமதி அளித்தனர். தொடர்ந்து நேற்று உறுதிமொழி ஏற்ற பின்னர் விழா தொடங்கியது. இதற்காக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அதில், 5 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து எஞ்சியுள்ள காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக கட்டவிழுத்தப்பட்டன.
காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. விழா தொடங்கிய சில நிமிடங்களிலேயே இருபக்கமும் அமைத்திருந்த தடுப்புகள் மீதும், உள்ளேயும் இளைஞர்கள் நின்று கொண்டு ஆரவாரம் செய்தனர். அவர்களை பல முறை வெளியேற கூறியும், வெளியேறாமல் இருந்ததால் அவ்வபோது விழாவினை நிறுத்திய போலீசார் லேசான தடியடி நடத்தி அனைவரையும் வெளியேற்றினர். தொடர்ந்து ஓடுபாதையில் குறிப்பிட்ட தூரத்தில், குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.1 லட்சமும், 3ம் பரிசு ரூ.75 ஆயிரம் என மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் காளைகள் முட்டி 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. லேசான காயம் ஏற்பட்ட 7 பேர் அருகில் இருந்த சுகாதார துறையினர் மூலம் முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டனர். மேலும் 3 பேருக்கு பலத்த காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
