×

ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு குதிரை பேரம்; அரியானா காங். எம்எல்ஏக்கள் இமாச்சலில் தங்கவைப்பு: சதி வேலையில் பாஜக இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

சண்டிகர்: அரியானா மாநில ராஜ்யசபா தேர்தலில் குதிரை பேரம் நடப்பதைத் தவிர்க்க காங்கிரஸ் தனது எம்எல்ஏக்களை பாதுகாக்க முடிவு செய்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலின் போது, அரியானா காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் ஒரு ஓட்டு செல்லாததாலும், கட்சி எம்எல்ஏக்கள் மாற்று வேட்பாளருக்கு வாக்களித்ததாலும் எதிர்பாராத தோல்வியைத் தழுவினார். அந்த கசப்பான அனுபவம் மற்றும் அரசியல் திருப்பங்கள் காரணமாக, இம்முறை காங்கிரஸ் கட்சி மேலிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

அரியானாவில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் 16ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு திரும்பப் பெறும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது களத்தில் 3 வேட்பாளர்கள் உள்ளனர். பாஜக சார்பில் கர்னால் முன்னாள் எம்பி சஞ்சய் பாட்டியா மற்றும் காங்கிரஸ் சார்பில் தலித் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரி கரம்வீர் சிங் பவுத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களுடன் பாஜக மாநில துணைத் தலைவரான சதீஷ் நந்தல் திடீரென சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளார். மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபையில், ஒரு வேட்பாளர் வெற்றி பெற 31 முதல் விருப்ப வாக்குகள் தேவை. தற்போது ஆளும் பாஜகவுக்கு 48 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 37 எம்எல்ஏக்களும் உள்ளனர். புள்ளி விபரப்படி இரு கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் கிடைப்பது உறுதி என்றாலும், சுயேச்சை வேட்பாளர் சதீஷ் நந்தலுக்கு பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் அரசுக்கு ஆதரவளிக்கும் மற்ற சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் காங்கிரசின் 37 எம்எல்ஏக்களிடம் சதீஷ் நந்தல் ஆதரவு கோர வாய்ப்புள்ளதால், வாக்குகள் சிதறக்கூடும் என காங்கிரஸ் அஞ்சுகிறது. இந்த சூழலில், எம்எல்ஏக்களைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சி அவர்களை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், ‘எங்கள் கட்சியின் ஒற்றுமையைச் சிதைக்கச் சதி நடக்கிறது. வேட்பாளர் கரம்வீர் சிங் வெற்றியை உறுதி செய்யவும், எங்கள் எம்எல்ஏக்கள் அந்நிய நபர்களால் திசைதிருப்பப்படுவதைத் தடுக்கவும் அவர்களை இமாச்சலுக்கு அழைத்து செல்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : RAJYASABA ,ARIANA KANG ,Imachal ,BJP ,Chandigarh ,Congress ,Ariana ,Rajya Sabha elections ,2022 Rajya Sabha elections ,Ariana Congress ,Senior Leader ,Ajay Makan ,
× RELATED வங்கதேசத்துக்கு 5,000 டன் டீசல் வழங்கும் இந்தியா