×

சர்வதேச விமான நிலையமாக மாறும் மதுரை விமான நிலையம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் பழமையான விமான நிலையங்களில் ஒன்றான மதுரையில் உள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்துவது பிராந்திய இணைப்பை மேம்படுத்தும், வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மற்றும் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

மேலும் கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் குழாய் இணைப்புகள் மூலமாக பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை டிசம்பர் 2028ம் தேதி வரை நீட்டிப்பதற்காக ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மொத்த செலவினத்தை ரூ.8.69லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் வரவிருக்கும் ஜேவர் சர்வதேச விமான நிலையத்திற்கான சாலை இணைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.3,630.77கோடி திருத்தப்பட்ட மூலதன செலவுக்கும் இந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 31கி.மீ. நீளமுள்ள முன்மொழியப்பட்ட திட்ட நடைபாதை தெற்கு டெல்லி , பரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகியவற்றில் இருந்து விமான நிலையத்திற்கு நேரடி மற்றும் அதிவேக இணைப்பை வழங்கும்.

மத்தியப்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை 752டி- யின் பத்னாவர்-பெட்லாவாட்-தண்ட்லா- திமர்வானி பிரிவில் இருந்து 80.45கி.மீ.நீளம் கொண்ட 4 வழிப்பாதையை உருவாக்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதலை வழங்கியிருக்கிறது. இதன் மூலமாக மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படுவதோடு, பயணம் நேரம், நெரிசல் உள்ளிட்டவை குறையும். இதுமட்டுமின்றி இந்தியா உடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் சீனா உட்பட அனைத்து நாடுகளில் இருந்தும் அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளையும் தளர்த்துவதற்கும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடக சந்திப்பின்போது தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

மேலும் அமைச்சரவை குழுவானது மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டை இணைக்கும் ரயில்வே அமைச்சகத்தின் மல்டி-டிராக்கிங் திட்டங்களை மொத்தம் ரூ.4474கோடி செலவில் மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டங்கள் சைந்தியா- பாகூர் மற்றும் சாந்த்ரகாச்சி-காரக்பூர் இடையேயான 4வது ரயில் பாதையின் கட்டுமானத்துக்கு வழிவகுக்கும். இதுமட்டுமின்றி திவால் நிலை மற்றும் திவால் நிலை குறியீடு(ஐபிசி) மற்றும் நிறுவனங்கள் சட்டம் 2013 ஆகியவற்றில் பல்வேறு திருத்தங்களுக்கும் அமைச்சரவை அனுமதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Madurai Airport ,Union Cabinet ,New Delhi ,Economic Affairs ,Delhi ,Modi ,
× RELATED விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏர் இந்தியா டிக்கெட் கட்டணம் உயர்வு.!