×

திருக்குளந்தை தர்மத்தின் தந்தை

`‘சனி அடிச்சா அழ வைக்கும்;
பின்னாலதான் ஆளாக்கும்’’
என்ற பழமொழி கிராமத்து வட்டாரப் பேச்சு வழக்கில் உண்டு. திருக்குளந்தை பெருமாள் கோயில் என்று கூறினால், யாருக்கும் தெரியாது. ஆனால், `‘திருக்குளம் பெருமாள்’’ என்று சொன்னால் அப்பக்கத்து மக்களுக்கும், பக்தர்களுக்கும் நன்கு தெரியும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 108 திவ்ய சேத்திரத்தில், நவதிருப்பதி வரிசையில் ஏழாவது திருத்தலம், திருக்குளந்தை பெருமாள் கோயில். சனி பகவானுக்கூரிய தலமாக இது கருதப்படுகிறது. திருமாலே சனி பகவானாக நின்று, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பெருமாளின் அன்புக்கு இணங்கஒரு காலத்தில், ‘தடாகவனம்’ என்று அழைக்கப்பட்டு வந்த சிற்றூரில், வேதசாரன் என்ற அந்தணர், தன் மனைவி குமுதவல்லியுடன் வாழ்ந்து வந்தார். புத்திரப் பேறு இன்றி மனம் வாடினார். தம்பதியினர், தடாகவனத்தில் இருக்கும் பொய்கையில் நீராடி, திருமாலை நோக்கி தவம் இருந்தனர். இறைவன் உள்ளம் கனிந்தது. அவர்களின் விடாமுயற்சியுடன் செய்த தவத்தின் பலனாக, தன்னுடன், வைகுண்டத்தில் வீற்றிருக்கும் மகாலட்சுமியை நோக்கி கூறினார்;“இவ்வுலகில் வாழும் மக்களின் குறையைப் போக்கும் தாயே! நீயே வேதசாரன் தம்பதியின் பெண் குழந்தையாக அவதரிக்க வேண்டும்” எனக் கூறினார்.

“சுவாமி, மாயலீலைகள் புரிய உள்ளம் கனிந்துவிட்டீர். நான் தவம் இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாங்கள் என்னை ஆட்கொள்ளும் அக்கணத்திற்காகவே நான் காத்திருப்பேன்” என உரைத்தாள். பின்னர் திருமாலின், கட்டளையின் படி, பூவுலகில் குமுதவல்லியின் கருவில் ஜெனித்தாள். திருமாலின் அருளால் வேதசாரனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் அழகு, தாமரை மலருக்கு இணையாக அழகிய வண்ணம் இருந்ததால், `‘கமலாவதி’’ என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.

எப்படி பெரியாழ்வார் ஆண்டாளுக்கு கண்ணனின் லீலைகளைக் கூறி வளர்த்தாரோ; அவ்வாறே கமலாவதிக்கும் தெய்வ பக்தியுடன் திருமாலின் பெருமையைக் கூறி, வெங்கடவாணனின் வாத்சல்யம், சுவாமித்துவம், சௌசீல்யம், சௌலப்யம் ஆகிய நற்குணங்களையும், பெருமைகளையும் அவள் உள்ளத்தில் வளர்த்தார். ஆண்டாள், பாவை நோன்பு நோற்றாள் என்றால், கமலாவதியோ, தவமிருந்து பெருமாளையே நினைத்து `‘மணந்தால் வேங்கடவாணனுக்கு மாலை சூட்டுவேன். இல்லையேல் கமலாவதியாகவே வாழ்வேன்’’ என உறுதி பூண்ட மனத்துடன் கானகம் சென்றாள். கடும் தவம் புரிந்தாள். வேங்கடவாணன் மனம் கனிந்தது. அவள் முன்னே தோன்றி, கௌஸ்துப மணியோடு அவளை ஆலிங்கனம் செய்து, தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார். இன்றும் திருக்குளந்தையில் திருமால் மார்பில் கமலாவதி அமர்ந்திருக்கும் காட்சியை நாம் சேவிக்கலாம்.

பாலிகை வனம்

கன்னிப் பெண், காட்டில் திருமாலை நினைத்து தவம் புரிந்ததால்; இவ்விடத்திற்கு ‘பாலிகை வனம்’ என்று வழங்கல் ஆயிற்று. பொதுவாக, பாலிகை என்றால் கன்னிகை என்ற பொருளும் உண்டு. அதுவே பாலிகை வனம் என்று அழைக்கப்பட்டது. இவ்வரலாறு, ஸ்ரீபிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. திருக்குளந்தை தலம், ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்துடன் ஒப்பிட்டு நோக்கத் தக்கதாகும். அங்கு ஸ்ரீஆண்டாள் அவதரித்தாள், என்றால் இங்கே கமலாவதி அவதரித்தாள். ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாளுக்கு பெரியாழ்வார், தந்தையாக இருந்து வளர்த்தார். இத்தலத்தில், கமலாவதிக்கு தந்தையாக இருந்தவர் வேதசாரன் என்பவர் ஆவார்.

குமுதவல்லிக்கு ஏற்பட்ட தீங்கு

தன் புதல்விக்கு கிடைத்த பெரும் பாக்கியத்தை நினைத்து பெருமிதம் அடைந்தாள். வேதசாரன் அங்கு எழுந்தருளிய பெருமாளின் மீது பக்தி கொண்டு, தினந்தோறும் தவறாமல் பூஜைகள் செய்து வணங்கினார். குமுதவல்லி, தம் மகள் இறைவனோடு ஐக்கியமானது தனக்கும் நற்கதி கிடைக்க வேண்டும் என திருமாலை எண்ணி தினமும் ஆராதனை செய்து வந்தாள். ஒரு நாள், குமுதவல்லி நீராட சென்ற பொழுது, அசுமசாரன் என்ற அரக்கன் அவளை கவர்ந்து சென்று, இமயமலை குகையில் சிறை வைத்தான்.

வேதசாரன் கண்ணீர்

தன் மனைவி குமுதவல்லியை அரக்கன் கொண்டு சென்றான் என்ற செய்தியை அறிந்ததும், என்ன செய்வது என அறியாமல் தவித்தான். திருமாலிடம் சென்று முறையிட்டு, குமுதவல்லியை மீட்டு தரவேண்டும். தன்னால் எதுவும் செய்ய இயலாது எனப் புலம்பினார். மாமனாரின் குரலைக் கேட்ட திருமால், குமுதவல்லியை மீட்டு வர உறுதி பூண்டார்.

கருடனின் ஆணவம்

திருமால் அருகில் இருந்த கருடன், இமயமலை நோக்கி தன் மீது அமர்ந்து தானே அரக்கனுடன் போர்ப் புரிய செல்ல வேண்டும் என்கின்ற ‘தான்’ என்ற ஆணவம் தலைக்கு ஏறியது. அதனால் சற்று தலை கணத்தோடு அமைதியாக பொறுமையைக் காத்தான். பக்தனின் துன்பத்தை அறிந்து கொள்ளாத கருடனின் ஆணவத்தை அடக்க எண்ணினார். கருடன், தன் மீது திருமாலை ஏற்றிக் கொண்டு மெதுவாக இமயமலை நோக்கி சென்றான். பொறுமைக் காத்த திருமால், சட்டென கருடனை தன் தோளின் மீது சுமந்து கொண்டு, காற்று வேகத்தில் பறந்தார். தன் தவறை உணர்ந்த கருடன், திருமாலின் திருவடிகளில் பணிந்து மன்னிப்பு கேட்டார். கருடனின் ஆணவம் அழிந்தது.

‘ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும், சில தருணங்களில் ‘தான்’ என்ற ‘கர்வம்’ உள்ளத்தில் அமர்ந்து எதிரில் உள்ள மனிதர்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பது இயல்பு. திருமால், தக்க சமயத்தில் இதனைத் துல்லியமாக கணித்து, ஆணவத்தை அறுவடை செய்து முக்தியை கொடுப்பார். தன்னிடம் மன்னிப்பு கேட்ட கருடனுக்கு, அறிவுரையை வழங்கினார்.

பின்பு இமயமலை குகைக்குச் சென்று அடைந்தனர். குகையில் அரக்கன் இல்லாத நிலையை கண்டு வியந்தனர். சிறை வைக்கப்பட்டிருந்த குமுதவல்லியை குகையில் இருந்து மீட்டு, கணவனிடம் ஒப்படைத்து விட்டு, மீண்டும் ஸ்ரீவைகுண்டம் திரும்பினர்.

அரக்கனின் சினம்

திருமால், தான் சிறைப்படுத்திய குமுதவல்லியை சிறை மீட்டதை அறிந்து, சினம் கொண்டு திருக்குளந்தைக்கு வந்தான். திருமாலோடு யுத்தம் புரிந்தான். அரக்கன் செய்த மாயத்திற்கு ஏற்ப தானும் பலவாறு உரு மாறிய திருமால்; அவனை வதம் செய்து அவன் உடலின் மீது நர்த்தனம் ஆடினார்.

மாயக்கூத்தன் மாயம்

கண் முன் தோன்றும் பொய்யும்,
மறைந்திருக்கும் உண்மையும் கூத்து.

கண்ணன் ஆடும் கூத்தில், தெய்வீக ஆன்மிக சக்தி மறைந்துள்ளது. இது வெறும் காட்சி அல்ல கருணை, ஞானம், முக்தியின் அழைப்பு. ஒவ்வொரு மனிதனின் ஆன்மாவும் இறைவனோடு ஐக்கியமாவதுதான் வாழ்க்கையின் லட்சியமாக உள்ளது. மனித உள்ளத்தில் எழும் அகந்தை, ஆணவம், கர்வம் எனும் மூன்றையும் அழித்து, பின்பு ‘பிறப்பற்ற முக்தி’ நிலையை அருளும் எம்பெருமான் திருவடியைப் பற்றினால் போதும். அவன் ஆடும் நாடகமே மாய கூத்து என்பதாகும். அவன் அழகில் மயங்கி கிடக்காதவர் எவரோ?

அசுமசாரன்

அசுமசாரன் மீது நர்த்தனம் புரிந்ததால், இப்பெருமாளுக்கு சோரநாதன் என்னும் திருநாமம் ஏற்பட்டது. சோரம் என்றால் நாட்டியம் என்பதும் பொருள் உண்டு. தூய தமிழில் மாயக்கூத்தன் என்பதாகும்.

வியாழ பகவானின் ஆசை

தேவர்களில் குருவாக விளங்கியவர் பிரகஸ்பதி. இவர் ஒரு சமயம், பெண்கள் மீது கொண்ட மோகத்தினால் சாபம் பெற்றார். அந்த சாபம் தீர வேண்டும் என்றால்; பெருமாளை வணங்கி வழிபட்டால், விமோசனம் கிடைக்கும் என்று கூற, அந்த சாபத்திலிருந்து விடுதலை பெற திருக்குளந்தைக்கு எழுந்தருளினர். அங்கிருக்கும் பெருமாளை வழிபட்டு வந்தார். மனம் கனிந்து அவர் தவத்தை மெச்சி அவர் முன் காட்சியளித்து, சாபத்தை நீக்கினார். அப்பொழுது திருமால் முன்பு, வியாழ பகவான் மண்டியிட்டு; “ஐயனே! எனக்கொரு ஆசை இருக்கிறது. என் சாபத்தைப் போக்கி விமோசனம் அளித்தது போலவே, என் ஆசையை நிறைவேற்ற வேண்டும்” என வேண்டினார்.

“உன் ஆசை எது?” என திருமாலும் கேட்டார்“தாங்கள் இவ்விடத்தில் அசுரன் உடல் மீது ஏறி ஆடிய நர்த்தன காட்சியை காண வேண்டும்” எனக் கேட்டார். சோரநாதன் மீண்டும் அக்காட்சியை வியாழபகவானுக்கு காட்டிக் கொடுத்த இடம் திருக்குளந்தையே ஆகும்.

நம்மாழ்வார் பாசுரம்

“கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன் கொல்வளை நெஞ்சத் தொடக்கம்
எல்லாம் பாடற்றொழிய இழிந்து வைகல்பல்வளையார் முன் பரிசுஅழிந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை வகுண்ட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடற் பறவை உயர்த்த வல்போர் ஆழி வளவனை யாதரித்தே.

திருவாய்மொழி8-2-4. (3561).
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரியவன் வித்தகன் மலர்மிசை நின்ற வெம் மணாளன்அத்தன் அம் பொழில் ஏழ் அளித்து அவருலகம் முன்னுண்டு மிழ்ந்தப் பால்ஒத்த தொல் சீரொடு நின்ற வெம் மொரு நாயகனே. ஏழு உலகங்களையும் படைத்து காத்து பிரளய காலத்தில் உண்டு உமிழ்ந்தவன். என்று ஆலிலை கிருஷ்ணனின் பெருமையைப் பாடியுள்ளார்.

பொன்முகரியன்

Tags : Thirukulanthai ,Dharma ,Thirukulanthai Perumal Temple ,
× RELATED வரம் பெற்ற இசை மேதை