நன்றி குங்குமம் தோழி
பூமி மாசடைய பல சுற்றுப்புற காரணங்கள் உள்ளன. ஆனால், அதில் மிகவும் முக்கியமானது, நாம் அணியும் தினசரி உடைகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை என்கிறார் ஃபேஷன் டிசைனரான வினோ சுப்ரஜா.துபாயில் வசித்து வரும் இவர், அடிப்படையில் ஆர்கிடெக்சர் பட்டதாரி. தற்போது ஃபேஷன் துறையில் நிலையான(Sustainable) ஃபேஷனில் தனக்கான அடையாளத்தினை ஏற்படுத்தி வருகிறார்.
அதற்கு அங்கீகாரமாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் பொது சபையில் உலகளாவிய நிலையான ஃபேஷன் குறித்து இவர் ஏற்படுத்தி வரும் முயற்சிக்காக விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர் வடிவமைத்த உடைகள் ஷாங்காய் மற்றும் லண்டன் ஃபேஷன் வீக் மேடைகளை அலங்கரித்துள்ளன. கடந்த ஆண்டு பவானி ஜமுக்காளம் கொண்டு இவர் வடிவமைத்த உடைகள் ஃபேஷன் உலகினை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கும் இவர் மூலம் உலகளவில் ஒரு அடையாளம் கிடைத்துள்ளது.
‘‘நான் வந்தவாசி பொண்ணு. ஆர்கிடெக்சர் படிக்க சென்னைக்கு வந்தேன். தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாகவும், எஃப்.எம்மிலும் ரேடியோ ஜாக்கியாகவும் வேலை பார்த்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு, சீனாவில் செட்டிலானேன். ஊரும் புதுசு, பாஷை புரியாது. என்னுடைய விசாவிற்கு வேலையும் கிடைக்காது. என்ன செய்வதுன்னு தெரியாமல் படிக்க முடிவு செய்தேன். ஆர்கிடெக்சர் படிச்சிருந்ததால், ஃபேஷன் டெக்னாலஜி சரியா வரும்னு ஆன்லைன் கோர்ஸ் ஒன்றில் சேர்ந்தேன்.
ஃபேஷன் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. சொல்லப்போனால் என்னால் ஒரு துணியை நேராக கூட கத்தரிக்க முடியவில்லை. கணவரிடம் நான் தப்பான முடிவு எடுத்துவிட்டேன்னு அழுதேன். ‘இந்த துறை உனக்கு புதுசு. பழகப் பழக வந்திடும்’ன்னு தைரியம் கொடுத்தார். ஃபேஷன் குறித்து அடிப்படை விஷயங்களை முதலில் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு அந்த துறை சார்ந்த தேடலில் இறங்கினேன். என்னுடைய அந்தத் தேடல்தான் ஷாங்காய் ஃபேஷன் வீக்கில் நான் உருவாக்கிய உடையினை இடம் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தது’’ என்றவர் தன்னுடைய படைப்பிற்காக சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார்.
‘‘சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்றலாகி சென்றோம். அங்கு ஃபேஷன் ஹப் என்றால் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ். ஆனால், நாங்க சென்றது டெட்ரியாட். பாழடைந்த கட்டிடங்கள் நிறைந்த ஊரில் என்ன செய்யப்போறோம்னு யோசனையாக இருந்தது. ஒரு தையல் மெஷினை வாங்கினேன். உடைகளை தைத்து அதை ஃபேஷன் உலகில் அறிமுகம் செய்தேன். அதைப் பார்த்து நியூயார்க் ஃபேஷன் வீக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சது. அமெரிக்காவை தொடர்ந்து எங்களின் பயணம் துபாய்க்கு மாறியது.
துபாயின் மார்க்கெட் ரொம்பவே வித்தியாசமானது. அமெரிக்காவில் இன்ஸ்டாவில் பதிவு செய்தால் போதும், அவங்க நம்மைத் தேடி வருவாங்க. இங்கு அப்படி இல்லை. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மக்கள் தொடர்பு நிறுவனம் மூலமாதான் அணுக முடியும் என்பதால் ஃபேஷன் மார்க்கெட்டிங் குறித்து படிச்சேன். அதில் ஃபேஷன் துறையினால் ஏற்படும் மாசுக்கேடு பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியானேன்.
என்ன டிரெஸ் எந்த பிரபலம் போட்டா நல்லா இருக்கும்னு யோசிச்சேனே தவிர, இந்த பூமியை நாம் எவ்வளவு கெடுத்திருக்கோம்னு நினைச்சுக்கூட பார்க்கல. முழுக்க முழுக்க ஆர்கானிக் பருத்தி உடைகளை மட்டுமே தயாரிக்க முடிவு செய்தேன். அதன் அடிப்படையில் தெருக்கூத்து குறித்து நான் உருவாக்கிய புரிசை டிசைன் உடைகள் லண்டன் ஃபேஷன் வீக்கில் இடம் பெற்றது” என்றவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து விவரித்தார்.
‘‘தெருக்கூத்து பார்த்து வளர்ந்தவள் நான். குறிப்பா புரிசை கண்ணப்ப தம்பிரான் அவர்களின் தெருக்கூத்து. அந்தக் கலையை என்னுடைய உடையில் பிரதிபலிக்க விரும்பினேன். தெருக்கூத்தில் துச்சாதனன் கதாப்பாத்திரம் மிகவும் வண்ணமயமாக இருக்கும். மஞ்சள், சிவப்பு, நீலம், வெள்ளை என அனைத்து நிறங்களும் அவரின் உடை மற்றும் மேக்கப்பில் பிரதிபலிக்கும். அந்த நிறங்கள் மற்றும் தமிழ் வார்த்தைகளை கொண்டு என் உடையினை வடிவமைத்தேன். அவை லண்டன் ஃபேஷன் வீக்கில் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் வேறு என்ன பாணியினை என் உடையில் அறிமுகம் செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது உலக தமிழ் அமைப்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சஸ்டெயினபிள் ஃபேஷனுக்காக எனக்கு விருது வழங்க இருப்பதாகவும், பாராளுமன்றத்தில் அது குறித்து ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்று கூறினார்கள். முதலில் எனக்கு எதுவுமே புரியல என்றாலும் கிடைத்த ஐந்து நிமிடத்தில் சொல்ல நினைக்கும் விஷயங்களை சொல்லி முடிக்கணும். குறிப்பாக தெருக்கூத்து, அதில் உருவான புரிசை கலெக் ஷன் மற்றும் சஸ்டெயினபிள் ஃபேஷன். மனசில் இருந்ததை பேசினேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. நான் லண்டன் செல்லும் போது எல்லாம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் வெளியே உள்ள மகாத்மா காந்தி சிலை முன் நின்று புகைப்படம் எடுக்க தவறமாட்டேன். இந்த முறை விருதுடன் படம் பிடித்த போது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.
சஸ்டெயினபிள் ஃபேஷன் குரு அவர்தான். அதற்காக குரல் கொடுத்திருக்கிறார். மாடர்ன் உடைகளை தகர்த்தி, பருத்தி உடைக்கு மாறச் சொன்னவர். அதற்காக பெரிய மார்க்கெட்டிங் எல்லாம் செய்ததில்லை. ராட்டை ெகாண்டு பருத்தி நூல்களை நெய்வார். அவர் இருந்த காலத்தில் எந்தவித சோஷியல் மீடியாவும் கிடையாது. ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்தித்து பருத்தி உடை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நான் சஸ்டெயினபிளை கையில் எடுத்த போது, பலரும் ‘ஒரு துணியை 30 தடவை போடச் சொல்ற, உடைகளை அளவோடு வாங்க சொல்ற’ன்னு திட்டினாங்க. அந்த சமயத்தில் காந்திதான் என் மனத்திரையில் வருவார். அவரைப் போல் எல்லாம் என்னால் செய்ய முடியாது என்றாலும் ஒரு சின்ன துரும்பாக இருக்க விரும்புகிறேன். ஊருக்கே சூரியனா இருக்க முடியலைன்னாலும், ஒரு சின்ன அகல் விளக்காக இருக்கலாமே” என்றவர், நெசவாளர்களுடன் இணைந்து அவரின் புதிய பவானி ஜமுக்காள பிராண்டினை பற்றி விவரித்தார்.
“பவானிக்கு சென்ற போது அங்குள்ள நெசவாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்பு 5000த்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இருந்தாங்க. இப்ப விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இருக்காங்க. 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள்தான் இத்தொழிலில் இன்றும் ஈடுபட்டு வராங்க. அடுத்த தலைமுறையினர் படிச்சிட்டு வேற வேலையில் இருக்காங்க. நல்ல விஷயம்தான் என்றாலும் இது நம்முடைய அடையாளம். அழிந்து வரும் இந்தக் கலைக்கு அங்கீகாரம் கொடுத்தால் கண்டிப்பாக இந்தக் கலையை காப்பாற்ற முடியும்.
முன்பெல்லாம் நம்முடைய ஒவ்வொரு வீட்டிலும் பவானி ஜமுக்காளம் இருக்கும். ஆனால், இன்று யாரும் தரையில் அமர்ந்து சாப்பிடுவதில்லை. அதனால் இதன் உற்பத்தியும், வியாபாரமும் குறைந்துவிட்டது. எப்படி உணவுத் தொழிலில் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்ற முடிகிறதோ அதேபோல் இந்த ஜமுக்காளத்தையும் ஃபேஷன் உலகில் மாற்றி அமைக்க விரும்பினேன். அப்படி நான் தயாரித்ததுதான் கைப்பைகள். இந்த பேக்குகளை என் பிராண்ட் பெயரில் தயாரித்து துபாய் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைத்திருக்கிறேன். கைப்பையாக மட்டுமில்லாமல் அதை உடையாகவும் அமைத்து லண்டன் ஃபேஷன் லீக்கில் மக்கள் முன்பு கொண்டு வந்தேன். மேலும், இதனை சோபா, சேர்களின் மேல் கவர் துணியாகவும் மாற்றி அமைக்கலாம்.
ஜமுக்காளத்தினை சுறுக்கு தள்ளுதல் என்ற முறையில் நெசவு செய்வாங்க. வெள்ளை நிற நூல் இதில் இணைக்கப்பட்டிருந்தாலும் நம் கண்களுக்கு அதில் உள்ள மற்ற வண்ணங்கள்தான் தெரியும். எனக்கு வேண்டிய டிசைன்களை வரைபடமாக வரைந்து அதற்கேற்ப தயாரித்து தரச் சொல்லி அதை கைப்பையாகவும் உடையாகவும் மாற்றி இருக்கிறேன்” என்றவர், தன் எதிர்கால திட்டம் குறித்து விவரித்தார்.
‘‘நான் எதுவும் பிளான் செய்வதில்லை. தில்லியில் ஒரு கண்காட்சியில்தான் ஜமுக்காளத்தினை பார்த்தேன். அதன் பிறகு பாவனிக்கு சென்றேன். அங்கு சக்திவேல் ஐயா அவர்களை சந்தித்தேன். அவர்தான் எனக்கு தயாரித்து கொடுத்தார். எங்க இருவரின் வேலையை பாராட்டி ஆளுநர் ரவி எங்களை அழைத்து கவுரவித்தார். இவை எல்லாம் எனக்கு ஒரு எனர்ஜி பானம் தான். இந்த துறையில் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு” என்றார் வினோ சுப்ரஜா.
செய்தி: ஷம்ரிதி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
