×

இன்று பூக்குழி வைபவம்; பக்தர்கள் குவிந்தனர்

 

நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழா, கடந்த பிப்.23ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் அதிகாலை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கோயிலில் அம்மன் உருவம் பொறித்த மஞ்சள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து பிப்.27ம் தேதி மயில் வாகனத்திலும், மார்ச் 3ம் தேதி சிம்ம வாகனத்திலும், 6ம் தேதி அன்னவாகனத்திலும் அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மின் ரதத்தில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அரண்மனை பொங்கல் வைத்தல், பால்குடம், மாவிளக்கு, கரும்பு தொட்டில், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நேற்று காலை மஞ்சள் பாவாடை கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை முதல், பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து காந்திநகர் பொதுமக்களால் கழுமரம் ஊன்றப்பட்டு, பின்னர் காமராஜ்நகர் பொதுமக்களால் கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். பிற்பகலில் பத்தர்கள் பூக்குழி இறங்குவர். இதில் முதலில் கோயில் பூசாரி பூக்குழி இறங்கியதை தொடர்ந்து, பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்குவர்.

Tags : Pookkuzhi festival ,Mariamman ,Masipperundhiruvizha ,Nattham ,Karanthamalai ,Kannimar Theertham ,Uluppakudi ,Theerthamkudam ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்