×

குன்னூர் அருகே வலையில் சிக்கிய சாரைப்பாம்பு மீட்பு

குன்னூர்,மார்ச்9: குன்னூர் அருகே வலையில் சிக்கிய சாரைப்பாம்பு மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள இந்திரா நகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் நேற்று மதியம் ஒரு சாரைப்பாம்பு வந்தது. அங்கு வேலி அமைப்பதற்காக வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த நைலான் வலையில் அந்த பாம்பு சிக்கியது. வலையில் இருந்து விடுபட முயன்றபோது அந்த பாம்பு வசமாக வலையில் பிணைக்கப்பட்டு தவித்தது.

இதைக் கண்ட அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக குன்னூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு முதன்மைப் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அவர்கள் வலையைச் சிறு துண்டுகளாக வெட்டிப் பாம்புக்கு எந்தவித காயமும் ஏற்படாத வண்ணம் பத்திரமாக மீட்டனர். சுமார் 6 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த மீட்புக் குழுவினர், பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

 

Tags : Coonoor ,Indira Nagar ,Nilgiris district ,
× RELATED ஊட்டி முழுவதும் சுற்றுலா பயணிகள்...