உடலின் வயதை விட மூளை அதிக வயதாகும்போது அல்சைமர் பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்: 45 வயதிலிருந்தே டிமென்ஷியா பாதிப்பு தொடங்கும் அபாயம்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

 

சென்னை: மனித உடலின் வயது என்பது பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர் வயது (chronological age), உயிரியல் வயது (biological age) என்பது உடல் உறுப்புகளின் உண்மையான நிலைமையைக் குறிக்கும். குறிப்பாக மூளைக்கு தனியாக உயிரியல் வயது உண்டு.நவீன வாழ்க்கை முறை, அதிக மன அழுத்தம், தூக்கக் குறைவு மற்றும் மின்னணு சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு போன்ற காரணங்களால் பலரின் மூளை இயல்பை விட வேகமாக முதிர்ச்சியடைந்து வருகிறது.

ஸ்டான்போர்டு மருத்துவ விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, மூளையின் உயிரியல் வயது உடலின் வயதை விட அதிகமாக இருந்தால், அது மரண ஆபத்தை 182 சதவீதம் அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. வயதான மூளை கொண்டவர்களுக்கு அல்சைமர் நோய் வரும் வாய்ப்பு சாதாரண மூளை உள்ளவர்களை விட 3.1 மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, இளமையான மூளை உள்ளவர்களுக்கு அல்சைமர் ஆபத்து மிகக் குறைவு வெறும் நான்கில் ஒரு பங்கு மட்டுமே. நினைவாற்றல் குறைவு, கவனச்சிதறல், சிந்தனை வேகம் குறைதல் போன்ற அறிகுறிகள் மூளை வயது அதிகரிப்பதால் ஏற்படுகின்றன. பொதுவாக அல்சைமர் ஆபத்து ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கதிரியக்க நிபுணர் மருத்துவர் அருண் குமார் கூறியதாவது: பிறந்ததிலிருந்து நாம் கணக்கு வைப்பது நமது காலண்டர் வயதைத்தான். ஆனால் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியாக ஒரு வயது இருக்கும். நுரையீரலுக்கு ஒரு வயது, கல்லீரலுக்கு ஒரு வயது, ரத்தத்துக்குக் கூட ஒரு வயது உண்டு. அனைத்து உறுப்புகளும் ஒரே வயதில் இருக்காது.

மூளைக்கு வயதாகும்போது டிமென்ஷியா, அல்சைமர் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக டிமென்ஷியா 60 வயதுக்கு மேல் தான் தொடங்கும் என்றாலும், தற்போது 50 வயதைக் கடந்த உடனேயே தொடங்கிவிடுகிறது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

அல்சைமர் நோய் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய முன்பெல்லாம் மூளையில் உள்ள செரிப்ரோஸ்பைனல் திரவத்தை (CSF – Cerebrospinal Fluid) எடுத்துப் பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளதால், எம்ஆர்ஐ (MRI) பரிசோதனை மூலம் மூளை வயது (Brain Age) பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சோதனையில் மூளையை 3டி வடிவில் பார்த்து, மூளைக்குள் உள்ள 25-க்கும் மேற்பட்ட பகுதிகளின் (structures/regions) அளவு எவ்வளவு உள்ளது என்பதை அளவிடுகிறோம். அதைத் தொடர்ந்து, 50 வயது பெண்ணுக்கு பொதுவாக எவ்வளவு அளவு இருக்க வேண்டும் என்பதை, பரிசோதனை செய்யப்பட்ட பலரின் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும்.

இதை ஏன் எடுக்க வேண்டும் என்றால் உதாரணமாக, ஒருவரது உண்மையான வயது 30 என்றால், மூளை வயது பரிசோதனையில் 25 என்று வந்தால் அது நல்லது (மூளை இளமையாக உள்ளது). ஆனால் 35 அல்லது 40 என்று வந்தால், மூளை சுருங்கத் தொடங்கியுள்ளது என்பதாகும் (accelerated aging). இதை முறையான உணவு, உடற்பயிற்சி மூலம் பல சமயங்களில் ரிவர்ஸ் (reverse) செய்ய முடியும்.முன்பெல்லாம் 60 வயதில் வரும் டிமென்ஷியா பாதிப்பு, தற்போது 45 வயதிலேயே சிலருக்கு ஏற்படுகிறது.

இதற்கு முக்கிய காரணங்கள், உடற்பயிற்சி இன்மை, மூளைக்கு வேலை கொடுக்காமல் இருப்பது. குறிப்பாக புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்கிவிடும்.தூக்கத்தின் போது தான் கிளிம்பேடிக் சிஸ்டம் (glymphatic system) மூலம் செரிப்ரோஸ்பைனல் திரவம் மூளையில் தேவையில்லாத அழுக்குகளை (waste/toxins) சுத்தம் செய்கிறது.

தூக்கம் போதுமான அளவு இல்லையென்றால் அது சரியாகச் சுத்தம் செய்ய முடியாது. மூளையில் தினமும் ஏறக்குறைய 1 மில்லியன் செல்கள் அழிந்து, புதிதாக உருவாகின்றன. 7 முதல் 8 மணி நேரம் முறையான தூக்கம் இல்லையென்றால், பழைய கழிவுப் பொருள்கள் வெளியேறாமல் தேங்கி, டிமென்ஷியா பாதிப்பு உருவாக வாய்ப்பு அதிகரிக்கிறது.

அல்சைமர் நோய் ஆண்களை விட பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது. ஆண்கள் சமூகத்தில் அதிகம் ஈடுபடுவதால், மூளைக்கு தொடர்ந்து சவால் அளிக்கும் செயல்பாடுகள் அதிகம் இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களின் (குறிப்பாக அம்மாக்கள்) உலகம் ஒப்பீட்டளவில் சிறியதாக இருப்பதால், அவர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.இந்த மூளை வயது பரிசோதனையை மேற்கொள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ் ரூ.3,500 வசூலிக்கிறது. வெளிநாடுகளில் இதுபோன்ற பரிசோதனைகள் ஏற்கனவே வந்துவிட்டன. இந்தியாவில் முதன்முறையாக ஆர்த்தி ஸ்கேன்ஸ் மட்டுமே இதை வழங்குகிறது. விரைவில் மற்ற மருத்துவமனைகளிலும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பொதுவாகவே பெண்களுக்கு மூளை வயது அவர்கள் உடல் வயதை விட அதிகமாக இருக்கும், டிமென்ஷியாவால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட இதுவும் ஒரு காரணம். எனவே பொதுமக்கள் முறையான உணவுப் பழக்கம் மேற்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும், குறிப்பாக மூளை சுறுசுறுப்பாக இயங்க ஏதாவது ஒரு வேலை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

தினசரி குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஒழுங்கான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். காய்கறி, பழங்கள் மற்றும் சத்தான உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிகமான மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். புத்தக வாசிப்பு செய்ய வேண்டும். புதிர் விளையாட்டுகள் போன்ற மூளைச் செயல்பாட்டைத் தூண்டும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

Related Stories: