திருமணமாகி 15 ஆண்டுகளான நிலையில் ஆஸ்திரிய கணவரின் சித்ரவதையால் நடிகை கண்ணீர்

மும்பை: முன்னாள் மிஸ் இந்தியா மற்றும் பாலிவுட் நடிகை செலீனா ஜெயிட்லி தனது கணவர் பீட்டர் ஹாக் மீது சுமத்தியுள்ள திடுக்கிடும் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரிய நாட்டின் தொழிலதிபரான பீட்டர் ஹாக்கிற்கும், முன்னாள் மிஸ் இந்தியா மற்றும் பாலிவுட் நடிகை செலீனாக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வின்ஸ்டன், விராஜ் ஆகிய இரட்டையர்கள் மற்றும் ஆர்தர் என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனால் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நீண்ட காலமாகப் பொறுமை காத்த செலீனா, கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை நீதிமன்றத்தில் கணவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் குடும்ப வன்முறை வழக்கைத் தொடர்ந்தார்.

இதில் 50 கோடி ரூபாய் இழப்பீடும், மாதம் 10 லட்சம் ரூபாய் பராமரிப்புத் தொகையும் அவர் கோரியுள்ளார். தற்போது இந்த வழக்கு குறித்து நேற்று செலீனா உருக்கமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘எனது தேன்நிலவு காலத்திலேயே கணவரின் கோர முகம் தெரிய ஆரம்பித்தது. விவரிக்க முடியாத கோபம், உடல் ரீதியான தாக்குதல், மன ரீதியான சித்ரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை அவர் அளித்தார். எனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடியதுடன், எனது கிரெடிட் கார்டுகளையும் அவரே பயன்படுத்தினார். எனது பெற்றோர் இறந்த சோகத்தில் நான் இருந்தபோது, மும்பையில் இருந்த எனது சொத்தை தானமாகத் தன்னிடம் எழுதித் தருமாறு மிரட்டி வாங்கிக் கொண்டார்.

ஆஸ்திரியாவின் மலைக்கிராமத்தில் என்னைத் தனிமைப்படுத்தி, எனது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை மறைத்து வைத்தார். 2025ம் ஆண்டு இறுதியில் எனக்குத் தெரியாமல் அவர் வியன்னாவில் இருந்த சொத்துகளை விற்க முயன்றபோதுதான், அண்டை வீட்டார் உதவியுடன் நான் இந்தியாவுக்குத் தப்பி வந்தேன்.

குழந்தைகளுக்காகவும், நம்பிக்கையாலும்தான் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தேன்’ என்று கூறியுள்ளார். தற்போது செலீனாவின் மூன்று மகன்களும் ஆஸ்திரியாவில் தந்தை வசமே உள்ளனர். சமீபத்தில் ஆஸ்திரிய நீதிமன்றம் செலீனா தனது மகன்களுடன் தினமும் ஒரு மணி நேரம் செல்போன் மூலம் பேச அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே மத்திய கிழக்கில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தனது சகோதரர் விக்ராந்தின் விடுதலைக்காகவும் அவர் போராடி வருகிறார்.

Related Stories: