×

பெரம்பூர் நெடுஞ்சாலையில் முரசொலி மாறன் பூங்கா, கலைஞர் நூற்றாண்டு நாணய நினைவு தூண்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

பெரம்பூர்: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.28.25 கோடியில் முடிவுற்ற 3 பணிகள், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.23 கோடியில் முடிவுற்ற 3 பணிகள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், ரூ.12.48 கோடியில் மேம்படுத்தப்பட்ட கழிவுநீர் உந்துநிலையங்களை இன்று காலை கொளத்தூர் தொகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திறந்துவைத்தார்.

மேலும், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ், பெரம்பூர் நெடுஞ்சாலையில் ரூ.4.20 கோடியில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நாணய நினைவுத் தூணையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது இந்த முரசொலி மாறன் பூங்காவில் பொலிவூட்டப்பட்ட நுழைவாயில், இசை நீரூற்று, பார்வையாளர் இருக்கை வசதியுடன் கூடிய சறுக்கு வளையம், நீண்ட நடைபாதை, நிழலாடும் நடைபாதை வசதிகள், தோட்டங்கள் மற்றும் கூரையுடன் கூடிய திறந்தவெளி அமைப்புகள் யோகா மையம், 2 எண்ணிக்கையில் பேட்மிண்டன் கோர்ட், சிறுவர்களுக்கான உடற்பயிற்சி உபகரணங்கள் உள்பட பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பெரம்பூர், கௌதமபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் புதிதாக கட்டப்பட்ட டாக்டர் அம்பேத்கர் கூட்டுறவு பண்டக சாலை நியாயவிலை கடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பல்லவன் சாலையில் டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இஸ்லாமிய குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரம் பேருக்கு அரிசி, வேட்டி, சட்டை, சேலை, பேரிச்சம்பழ பாக்கெட் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் மற்றும் நிதியுதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதே பகுதியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் படித்த 53 மாணவிகள், 32 மாணவர்களுக்கு மடிகணினியுடன் சான்றிதழ்கள், தையல் பயிற்சி முடித்த 320 பெண்களுக்கு தையல் இயந்திரங்களுடன் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

மேலும், கலைஞர் கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்த 200 பேருக்கு கண் கண்ணாடிகள், புத்தாடைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து, தீட்டி தோட்டம் முதல் தெருவில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் புதிய கழிவுநீர் உந்து நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் கொளத்தூர் தொகுதியில் உள்ள பல்வேறு கழிவுநீர் உந்து நிலையத்தில் ரூ.12.48 கோடியில் மின்னியல், இயந்திரவியல் கட்டிட கட்டமைப்புகளை மேம்படுத்தி வலுப்படுத்தப்பட்ட பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஜவகர் நகர் 2வது வட்ட சாலையில், மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட பெண்கள் உடற்பயிற்சி கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ஜவகர் நகர் முதல் சர்க்குலர் சாலையில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டப்படட நவீன நூலகம், முதல்வர் படைப்பகத்தையும் திறந்து வைத்தார். மேலும், பேப்பர் மில்ஸ் சாலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட நவீன அங்காடியை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து கொளத்தூர், சீனிவாசா நகர் 3வது தெருவில் சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, இரா.கிரிராஜன், தாயகம் கவி எம்எல்ஏ, துணைமேயர் மகேஷ்குமார், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், பொது நூலக இயக்குநர் ச.ஜெயந்தி, சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர். சந்திரசேகர் சாகமூரி, மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மகேஷ்குமார், சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Murasoli Maran Park ,Perampur Highway ,MLA ,K. Stalin ,Perampur ,Chennai Metropolitan Development Group ,Chennai Municipal Corporation ,Chennai Metropolitan Drinking Water Supply and Sewerage Board ,
× RELATED உணவு உற்பத்திக்கும் பாதிப்பை...