இஸ்லாமாபாத்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் போர் தொடுத்துள்ளதால், ஆத்திரமடைந்துள்ள ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உலக நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரேவாரத்தில் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதுடன், கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.55 அதிகரித்து ரூ.321.17க்கு(பாக். ரூபாய் மதிப்பு) விற்பனை செய்யப்படுகிறது. இது 17% அதிகமாகும். இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.55 உயர்ந்து ரூ.335.86 (பாக். ரூபாய் மதிப்பில்) விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு மார்ச் 7ம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சர் அலி பெர்வைஸ் மாலிக், துணை பிரதமரும், வௌியுறவு அமைச்சருமான இஷாக் தார் மற்றும் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் ஆகியோர் கூட்டாக அறிக்கை வௌியிட்டனர். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலிய அமைச்சர் அலி பெர்வைஸ் மாலிக், “நாட்டில் போதுமான அளவுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளன. அண்டை நாடுகளில் நடந்து வரும் போர் பிற நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்த நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாது. அதன் முடிவுக்கு தெளிவான காலக்கெடு எதுவுமில்லை” என்றார்.
